December 17, 2014

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

மழைக்கால நோய்க்கான வீட்டு வைத்தியம்!

பருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!

* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.

* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.

No comments:

Post a Comment