February 16, 2017

இ.எம்.தயாரிப்பது எப்படி?

இ.எம்.தயாரிப்பது எப்படி?

இ.எம். என்கிற திறமி தயாரிப்பு இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் விரட்டியாகவும் செயல்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்...

பப்பாளி-1 கிலோ,
பரங்கி-1 கிலோ,
வாழைப்பழம்-1 கிலோ,
நாட்டுச்சர்க்கரை-1 கிலோ,
முட்டை-1


பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும். இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் இ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையை போட்டு மூடிவைத்து விடவும். அடுத்த 15-ம் நாள்...

அதாவது 30-ம் நாள் இ.எம் தயார். 10 லிட்டர் நீருடன் 500 மில்லி இ.எம். கலந்து தெளிக்கலாம்.

இதைத் தெளிப்பதால் இலைச்சுருட்டு நோய், மஞ்சள் நோய் போன்றவை கட்டுப்படுகின்றன. பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் போலவே இந்த இ.எம். திறமி நுண்ணுயிரியும் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. பாசனநீரில் கலந்துவிட்டாலே போதுமானது. ஒரு முறை தயாரித்தால்... ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
_____x___________x___________x___________x___________x___________x___


வேப்பங்கொட்டை கரைசல்::

பூச்சியை விரட்டி அடிக்கவும், பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகவும், ஏற்கெனவே இருக்கும் நோய்களைத் துரத்தவும், இது பயன்படும்.

பத்து கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி, 20 லிட்டர் நீரில் கரைத்து 24 மணி நேரம் வைத்திருக்கவும். பின்பு இதை வடிகட்டி 200 லிட்டர் நீருடன் 100 கிராம் காதி சோப்பு (கரைசல் பயிர்களின் மீது ஒட்டுவதற்காக) கலந்து, கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கவும். ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்க் வரை பிடிக்கும்.

இதனால் கம்பளிப் புழுக்கள், அசுவினி, தத்துப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், புகையான், இலை சுருட்டுப்புழு, ஆனைக் கொம்பன், கதிர்நாவாய் பூச்சிகள் கட்டுப்படுகின்றன. மேலும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் போன்றவையும் கட்டுப்படுகின்றன.

Courtesy:: www.facebook.com/வாங்க-விற்க-563035333829934

February 15, 2017

சின்னச்சின்ன செய்திகள்: குருகு நாட்டுக்கோழி

சின்னச்சின்ன செய்திகள்: குருகு நாட்டுக்கோழி

ஆண்டுக்கு எண்பது முட்டையிடும் நாட்டுக்குருகு: நாட்டுக்கோழி இனங்களில் ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்ததில் பல அரிய தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கிறார் டாக்டர் சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைஊட்டச்சத்துத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி, நாமக்கல். தாத்தையங்கார் பேட்டை பகுதியில் "குருகு' என்ற நாட்டுக்கோழி இனம் வளர்க்கப்படுகிறது.

இதைக்"குறுவ', "குறுவை', "குருவன்' என்ற பல பெயர்களில் அழைக்கிறார்கள். ஆண்டுக்கு அதிகபட்சம் 80 முட்டைகள் வரை இடும். ஆனால் நாட்டு ரகத்தைச் சேர்ந்த மற்ற கோழிகள் 40 முட்டை வரைதான் இடும். குருகுக் கோழிகளுக்கு தாய்ப்பாசம் அதிகம்.எனவே குஞ்சுகளை பொன்போல பாதுகாக்கும்.

உதாரணமாக ஒருமுறை 10 முட்டைகள்
அடைகாக்கிறது என்றால் அதில் 8 குஞ்சுகளை வளர்த்து ஆளாக்கிவிடும். இதனால்தான் அந்தப் பகுதி விவசாயிகள் குருகு இனத்தை விரும்பி வளர்க்கிறார்கள். தாத்தையங்கார் பேட்டையின் அருகே உள்ள பவித்திரம் பகுதியில் நடக்கும் சந்தையில் இந்த இனக்கோழி விற்பனைக்கு கிடைக்கும். இந்தச் சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறுகிறது.
குருகு க்கான பட முடிவு

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...

நல்வழி காட்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு...
கோழிக்குஞ்சு உற்பத்தி மூலமே குதூகல வருமானம்...
கு.ராமகிருஷ்ணன்
படங்கள்: கே. குணசீலன்
 கால்நடை
''நாட்டுக்கோழியை, மேயவிட்டுத்தான் வளக்கணும். பிராய்லர் கோழி மாதிரி கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு கம்பெனி தீவனத்தைக் கொடுத்தா... அதை நாட்டுக்கோழினு சொல்ல முடியாது. 'நாட்டு பிராய்லர் கோழி'னு வேணும்னா சொல்லிக்கலாம். அதேசமயம்... மேய்ச்சல் முறையில அதிகளவு கோழிகளைப் பராமரிக்க முடியாதுங்கறதும் உண்மை. அதனால... அடைப்புடன் கூடிய நடமாடும் முறையில (கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறை) வளர்க்கும்போது, நாட்டுக்கோழிகளைத் தரம் குறையாமலும் ஆரோக்கியமாவும் வளர்க்க முடியுது'' என்று உற்சாகமாக தன் அனுபவத்தைச் சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி.

கோழிகளுக்குத் தீவனம் போட்டபடியே நம்மிடம் பேச்சைத் தொடர்ந்த துரைசாமி... ''நான் 5 ஏக்கர்ல நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதோட கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில ஆடுகளை வளர்க்கலாம்னு வலை வேலியோட கொட்டகை அமைச்சேன். ஆனா, ஆடு வளர்ப்பு எனக்கு சரிப்பட்டு வரல. அதனால, அதை விட்டுட்டேன். சும்மா கிடக்குற கொட்டகையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு யோசிப்ப கிடைச்சதுதான்... கோழி வளர்ப்பு!
ஆட்டுக்கொட்டகையில் தோன்றிய யோசனை !
நாமக்கல்ல இருக்கற நாட்டுக்கோழிப் பண்ணையில, ஒரு குஞ்சு 35 ரூபாய்னு ஒரு நாள் வயசுள்ள 200 கோழிக்குஞ்சுகள வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்கிட்ட இருந்த கொட்டகையில 100 கோழிகளத்தான் வளர்க்க முடியும். அதனால மூணு மாசத்துல குஞ்சுகள் கொஞ்சம் பெருசானதும் 90 பெட்டை, 10 சேவல்களை மட்டும் வெச்சுக்கிட்டு மிச்சத்தை வித்துட்டேன். குஞ்சுகளை வாங்கிட்டுப் போனவங்க அடிக்கடி வந்து, 'கோழிக்குஞ்சு வேணும்’னு கேட்டாங்க. அப்போதான் குஞ்சுகளுக்கு நிறைய தேவை இருக்குதுனு புரிஞ்சுச்சு. அதுக்கப்பறம் கோழிக்குஞ்சு உற்பத்தியில தீவிரமா இறங்கிட்டேன்.
வாரத்துக்கு 75 குஞ்சுகள் !
பொதுவா, அஞ்சாறு மாச வயசுக்கு மேல ஒண்ணொண்ணா முட்டை போட ஆரம்பிச்சு... 9-ம் மாசத்துல இருந்து முட்டைகள் அதிகளவுல கிடைக்க ஆரம்பிச்சுது. முட்டைகளை இன்குபேட்டர் மூலமா பொரிச்சு விற்பனை பண்றேன். முட்டைகளைத் தனியா விக்கறதில்லை. வாரத்துக்கு அம்பதுல இருந்து 100 குஞ்சுகள் வரைக்கும் உற்பத்தியாகும். ஏதாவது காரணத்தால இறந்தது போக, சராசரியா வாரத்துக்கு 75 குஞ்சுகள வித்துக்கிட்டிருக்கேன்.
மூணு வயசானதுக்கப்பறம் முட்டை உற்பத்தி குறைஞ்சுடும். அதனால மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தாய்க்கோழிகளை மாத்திடணும். என்கிட்ட உற்பத்தியாகுற குஞ்சுகளையே தனியா வளர்த்து, தாய்க்கோழிகளா  வெச்சுக்குவேன்'' என்ற துரைசாமி, தீவன மேலாண்மை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
செலவைக் குறைக்கும் பசுந்தீவனம் !
ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு   120 கிராம்ங்கிற கணக்குல, 100 கோழிகளுக்கும் சேர்த்து தினமும் 12 கிலோ அடர்தீவனம் தேவைப்படும். நான் பசுந்தீவனத்தை அதிகமா கொடுத்து, அடர்தீவனச் செலவைக் குறைச்சுக்கிறேன். 100 கோழிகளுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 4 கிலோ அடர்தீவனம்தான் கொடுக்கிறேன். எருமைப்புல், கிளரிசீடியா, வாதமடக்கி, முள்முருங்கை, அசோலா, குதிரைவாலினு கிடைக்கற தீவனங்கள 15 கிலோ அளவுக்கு கொடுக்கிறேன்.
அதுவுமில்லாம அடர்தீவனத்துக்காகவும் நான் அதிகமா செலவழிக்கறதில்ல. 3 கிலோ சோள மாவு, 800 கிராம் நொய் குருணை, 100 கிராம் கம்பு, 100 கிராம் கேழ்வரகு இதை மட்டும் வெச்சு 4 கிலோ தீவனம் தயாரிச்சுடுவேன். இதுக்கு 60 ரூபாய்தான் செலவாகுது.
காய்கறி கடைகள்ல இலவசமா கிடைக்கக்கூடிய கழிவுகளையும் அப்பப்போ எடுத்துட்டு வந்து கோழிகளுக்கு கொடுக்கிறேன். இதையெல்லாம் கோழிகள் விரும்பி சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, ஆரோக்கியமா இருக்கு. பெருசா நோய்களும் வர்றதில்லை.
பேன்களைத் துரத்தும் மண்குளியல் !
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையாகவே மண் குளியல் செய்யுற பழக்கம் உண்டு. றெக்கையை விரிச்சு வெயில்ல காய வெச்சு மண்ணுல போட்டு அடிச்சுக்குறதால தேவையில்லாத ரோமங்கள், பேன்கள்லாம் தானாவே உதிர்ந்துடும். கொட்டில்ல அடைச்சு வெச்சா... மண்குளியலுக்கு வாய்ப்பில்லாமப் போயிடும். கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில கோழிகளுக்கு சுதந்திரமா மேயுற உணர்வும் இருக்கறதால, இயற்கையாவே கோழிகள் ஆரோக்கியமா வளருது. இந்த முறையில எச்சங்களால பரவுற நோய்கள் இந்த முறையில் குறைவா இருக்கு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா... கொட்டில்ல அடைச்சு வெக்கிறப்போ கோழிகளுக்குள்ள சண்டை வந்து  ஒண்ணை ஒண்ணு கொத்திக்கும். அதுக்காக அலகை வெட்டி விடுவாங்க. ஆனா, கொட்டில் மற்றும் மேய்ச்சல் முறையில இந்தப் பிரச்னை இருக்கறதில்ல. கோழிகளுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா, பறந்து போய் தப்பிச்சுக்கும். நாட்டுக்கோழிகளோட அலகை வெட்டிவிட்டா, அதுக்கு சந்தையில விலை கிடைக்காதுங்கறதையும் மனசுல வெச்சுக்கணும்'' என்ற துரைசாமி நிறைவாக,
''நான் உற்பத்தி பண்ற குஞ்சுகள பெரும்பாலும் ஒரு நாள் வயசுலயே வித்துடுவேன். ஒரு குஞ்சு 35 ரூபாய்னு வாரத்துக்கு 75 குஞ்சுகள் மூலமா 2,625 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல தீவனச்செலவு, பராமரிப்பு எல்லாம் போக வாரத்துக்கு 2,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. நானே பராமரிச்சுக்குறதால பெரிய அளவுல செலவில்லை. அதனால விவசாயத்தோட சேர்த்து நான் மட்டுமே பாத்துக்குற அளவுக்கு 100 கோழிகளை மட்டும் வெச்சுக்கிட்டிருக்கேன்'' என்றார், உற்சாகமாக.

 இப்படித்தான் வளர்க்கணும்
 கொட்டகையின் நீளம் 20 அடி. அகலம் 10 அடி. தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டு அதற்கு மேல், 3 அடி உயரத்துக்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை, கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ளது. கொட்டகையின் முன்பகுதியில் 40 அடி நீளம், 10 அடி அகலம், 5 அடி உயரத்துக்கு மூன்று புறமும் கம்பிவேலி அமைக்கப்பட்டு, அதன் மீது நைலானாலான மீன் வலை அமைக்கப்பட்டுள்ளது. 100 நாட்டுக்கோழிகளை வளர்க்க, இந்த அளவு போதுமானது.
கோழிகளால் இங்கு தாராளமாக நடமாட முடியும். தேவையான வெயில் கிடைக்கும். அதேசமயம் வெளியேற முடியாது. நிழல் தேவை என்றால், கொட்டகைக்குள் வந்து அடைந்து கொள்ளும். தினமும் காலை 6 மணிக்கு கொட்டகையைத் திறந்து விட்டு, மாலை 6 மணிக்கு கொட்டகைக்குள் கோழிகளை அடைத்து விடலாம். வெளிப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் பாம்பு, காட்டுப்பூனை போன்ற ஜீவராசிகளால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதை அமைக்க 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
4 மாதம் வரை குஞ்சுத்தீவனம் !    
 பொரித்ததில் இருந்து 15 நாட்கள் வரை ஒரு கோழிக்குஞ்சுக்கு தினமும் சுமார் 5 கிராம் வரை குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். அடுத்த15 நாட்களுக்கு தினமும் 10 கிராம் அளவுக்கு குஞ்சுத்தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு மாத வயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தீவனத்தை அதிகரிக்க வேண்டும். 4-ம் மாதத்திலிருந்து வளர்ந்த கோழிகளுக்கான தீவனத்தை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது நாமே தயாரித்துக் கொடுக்கலாம்.
கோழிகள் முட்டையிட்ட உடனே, ஒரு மண்பானையில் உமியைப் பரப்பி முட்டைகளை வைத்து ஈரத்துணியால் முடி வைக்க வேண்டும். முட்டைகள் சேர்ந்த பிறகு இன்குபேட்டரில் வைத்துப் பொரிக்க வேண்டும்.
21 நாளில் குஞ்சுகள் பொரித்துவிடும். பிறந்த குஞ்சுகளை சுமார் ஒன்றரையடி உயரம், 4 அடி விட்டத்துக்கு வட்ட வடிவில் அட்டைகளை வைத்து ப்ரூடர் (செயற்கை வெப்பம் ஏற்படுத்தும் விளக்கு) அமைத்து, அதற்குள் விட வேண்டும். ஒரு மாதம் வரை குஞ்சுகளுக்கு பல்பு மூலம் வெப்பம் கொடுக்க வேண்டும்.

Nattu Koli valarpu Nanmaigal

நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல்கிராமப்புற மக்களின்அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது
நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறதுஅதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறதுஎனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

தோட்டத்தில் கோழிகளை வளர்க்கும் போது

கோழிகளை வளர்க்கும் முறை

தோட்டத்தில் கோழிகளை வளர்க்கும் போது நாம் கொஞ்சம் கவனத்துடன் இருந்தால் தொற்று நோய்களைத் தவிர்த்து கொள்ள முடியும்
pannaiyar-koli.
வெளியில் சென்று வந்ததும் உடனே பண்ணைக்குள் செல்லக் கூடாது;
பார்க்க வருபவர்களையும் வாங்க வருபவர்களையும் தனி இடத்தில் நிறுத்தி நாம்தான் பண்ணைக்குள் சென்று காட்ட வேண்டிய கோழிகளைக் கொண்டு வந்து காட்ட வேண்டும்;

இறந்த கோழிகளையும் நாய் அல்லது காக்கை கொண்டு வந்து போடும் கோழி உடல்களையும் உடனே ஃபர்மலின் தெளித்துப் புதைத்து விட வேண்டும்;
வேறு இடத்தில் இருந்து கொண்டு வரும் குஞ்சுகளை உடனே நம் பண்ணைக்குள் விடாமல் மூன்று நாட்களுக்குத் தனி இடத்தில் வைத்து துளசித் தேனீர் தந்து அதன் பிறகு உள்ளே விட வேண்டும்.

தினமும் காலையில் கோழிகளைத் திறந்து விட்டு முதல் தீனி தரும் போதும், மேய விடும் போதும், மாலையில் அடைக்கும் போதும் அருகில் சற்று நின்று ஒவ்வொரு கோழியும் தீனி எடுக்கும் விதத்தையும் அளவையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவற்றின் எச்சங்களைக் கவனிக்க வேண்டும். அவை நன்றாகத் திரண்டு பிழுக்கை வடிவில் இருக்க வேண்டும். இளகி இருந்தாலோ தண்ணீராக இருந்தாலோ, உடனே அந்தக் கோழிகளைத் தனிப் படுத்தி அவற்றிற்கு வாய் வழியாகக் கெட்டியான மோர் தர வேண்டும்.

மறுநாள் முழுவதும் அனைத்துக் கோழிகளுக்கும் தண்ணீருக்குப் பதிலாகக் கெட்டி மோர் மட்டுமே தர வேண்டும்.

கோடையிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோழிகளுக்கு மோர் தரவேண்டும்.
இந்த முறையில் கழிச்சல் நன்றாகக் கட்டுப் படுகிறது. கழிச்சல் கடுமையாக இருந்தால் இரசாயன மருந்துகளும் தேவைப் படும்.

கடுமையான கழிச்சல் வந்தால் பெரும்பாலான கோழிகள் இறந்து விடும்.
எப்போதும் நூறு கோழிகள் இருக்கும் எங்கள் பண்ணையில் இதுவரை வெள்ளைக் கழிச்சலோ இரத்தக் கழிசலோ வந்ததில்லை.
நன்றி
Chandramouleeswaran MK Marudhachalam

நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? லாபகரமானதா?

நாட்டுக்கோழி வளர்ப்பில் (பண்ணை) உள்ள சிரமங்கள் என்னென்ன? லாபகரமானதா?

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது, நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன. குருவுக்கோழி,பெருவிடைக்கோழி,சண்டைக்கோழி, அசில்கோழி, கடக்நாத் என்னும் கருங்கால் கோழி, கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட்நெக், கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி.

நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்.

கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 500 கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது. கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

பாம்புகள் நடமாட்டம் இருந்தால் பண்ணை முறை என்றால் பண்ணையை சுற்றி ஒரு அடி உயரம் மீன் வலைகளை கட்டலாம். பண்ணையை சுற்றி சிறியாநங்கை வளர்க்கலாம்.

மேலும், கோழி வளர்க்கும் இடத்தில் வான்கோழி மற்றும் கின்னிக்கோழி ஒன்று அல்லது இரண்டு வளர்க்கலாம். கோழி வகைகளில் வான்கோழியும், கின்னிக்கோழியும் மட்டும் சற்று வித்தியாசமானவை.

பொதுவாக கின்னிக்கோழியை வளர்ப்பதற்கு தனித்திறமையே வேண்டும் என்பார்கள். ஏனெனில் கின்னிக்கோழிகளின் முழுநேர வேலையே இரையை அரைத்துக் கொண்டு இருப்பது தான்.ஆனால், அதே நேரத்தில் கின்னிக்கோழிகள் வளர்க்கப்படும் இடத்தில் காட்டுப்பகுதியாக இருந்தாலும் மனிதர்கள் தைரியமாக நடமாட முடியும் மற்றும் வாழவும் முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் நாயின் செய்கைகளில் ஒருசில குணங்கள் கின்னிக்கோழிகளிடம் உண்டு .. இவற்றில் முக்கியமான ஒன்று கின்னிக்கோழிகள் வளரும் வீட்டிற்கு அருகில் விஷம் கொண்ட பாம்புகள் உள்பட விஷஜந்துகள் எதுவந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு எஜமானர்களுக்கு எச்சரிக்கை மணியாக கத்திக்கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி வீட்டில் பழகிய நபர்களை தவிர வேறுயாராவது புதிய மனிதர்கள் வந்தாலும் கூட கின்னிக்கோழிகள் தங்களது கடமையை செய்ய தவறுவதில்லை…இது எழுப்பும் வித்தியாசமான சத்தத்தால் ஒருவிதமான அலைகள் உருவாகின்றன.. இதனால் அந்தபக்கம் பாம்புகள் வருவதில்லை..முயற்சி செய்து பார்க்கவும்…நன்றி.. வாழ்த்துக்கள்.
www.facebook.com/pages/வாங்க-விற்க/563035333829934

நாட்டுகோழிகளின் நோய்த்தடுப்பு மேலாண்மை :

நாட்டுகோழிகளின் நோய்த்தடுப்பு மேலாண்மை :

நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள் :

1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்


கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்

கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.

7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்

14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்

3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்

5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்

8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்

18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .

குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

கோழிக்கு இயற்கை முறையில் தீவனம் தயாரிப்பது எப்படி ?

கோழிக்கு இயற்கை முறையில் தீவனம் தயாரிப்பது எப்படி ?
தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்:-
மக்காச்சோளம் 40 கிலோ
சோளம் 7 கிலோ
அரிசிகுருணை 15 கிலோ
சோயா புண்ணாக்கு 8 கிலோ
மீன் தூள் 8 கிலோ
கோதுமை 5 கிலோ
அரிசித் தவிடு 12.5 கிலோ
தாது உப்புக் கலவை 2.5 கிலோ
கிளிஞ்சல் 2 கிலோ

மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

கோழி பண்ணையில் கொழிக்குது பணம்!

சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில் கிடைக்கும் முட்டைகளை விற்று அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.
வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?
முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!
கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்
கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு
குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.

வருவாய் எவ்வளவு?
ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!
தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.
www.facebook.com/pages/வாங்க-விற்க/563035333829934

ஆண்டுக்கு 230 முட்டையிடும் கிராமப்பிரியா 110 முட்டையிடும் வன ராஜா கோழி

ஆண்டுக்கு 230 முட்டையிடும் கிராமப்பிரியா 110 முட்டையிடும் வன ராஜா கோழி

திருச்சி: ஐதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குனரகம், கிராமப் பிரியா (முட்டைரகம்), வனராஜா (முட்டை மற்றும் இறைச்சி ரகம்) என்ற இரு கோழி ரகங்களை உருவாக்கியது. பார்ப்பதற்கு நாட்டு கோழிகளை போன்ற தோற்றமுடைய இக்கோழிகள், நாட்டு கோழிகளை விட அதிக எண்ணிக்கையில் முட்டையிடக் கூடியவை. முதலில் இக்குஞ்சுகள், தடுப்பூசிகள் மற்றும் உரிய தீவனங்களுடன் அடை காப்பானில் 6 வார கால தொடர் செயற்கை வெப்பத்தில் பராமரிக்கப்படுகின்றன. பின்னர் புறக்கடை வளர்ப்புக்கு ஈடுபடுத்தப்படுவதால் கோழிகளே உணவு தேவையை எளிதில் பூர்த்தி செய்து கொள்கின்றன. இதன் மூலம் அதிக எடையையும், அதிக முட்டையிடும் திறனையும் கோழிகள் பெறுகிறது.

அதாவது ஒன்றரை ஆண்டில் கிராமப் பிரியா ரக கோழி 200 முதல் 230 முட்டைகளும், வனராஜா ரக கோழி 100 முதல் 110 முட்டைகளும் கொடுக்கிறது. கோழிகளின் எடையும் அதிகம் என்பதால் 2.2 கிலோ வரை இறைச்சியும் கொடுக்க வல்லது. இவ்வகை கோழிகளை வளர்க்க, குறைந்த முதலீடே போதுமானதாகும். இதனால் கோழி விதை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது.

கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன், உதவி பேராசிரியர் மருத்துவர் ஷிபிதாமஸ் ஆகியோர் கூறுகையில், புரதசத்து அதிகமுள்ள முட்டையை சீராக எடுத்துக் கொள்ளாததால் இன்று பல கிராமங்களில் கர்ப்பிணிகளும், வளரும் குழந்தைகளும் புரத பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இதற்கான சிறந்த தீர்வாக கிராமப்பிரியா, வனராஜா ஆகிய கோழி ரகங்கள் அமையக்கூடும்.

மக்கள் பயன்பெறும் வகையில் இந்த கோழிக்குஞ்சுகளை விவசாயிகளுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். திருச்சி மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகள் திருச்சி, கால்நடை பயிற்சி மையத்தில் இதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருச்சி - 0431¬2770715
வன ராஜா கோழி க்கான பட முடிவு

www.facebook.com/pages/வாங்க-விற்க/563035333829934

ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்

  • ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்
    முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.

    வயது நோய் தடுப்பு மருந்து செலுத்தும் வழி :
    முதல் நாள் மாரெக்ஸ் ஹச்.வீ.டி மருந்து தோலின் கீழ்
    5-7 நாட்கள் ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப் லசோட்டா எப் கண்ணில் (சொட்டு மருந்து)
    10-14 நாட்கள் ஐபிடி உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி குடிதண்ணீர் மூலம்
    24-28 நாட்கள் ஐபிடி உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி குடிதண்ணீர் மூலம்
    8வது வாரம் இராணிக்கெட் நோய் இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி இறக்கையில் தோலின் கீழ்
    15-18 நாட்களில் இராணிக்கெட் நோய் உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி இறக்கையில் தோலின் கீழ்

    ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழு
    க்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
     
    குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்

நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்

நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்

ஜி.பிரபு, படங்கள் : வீ.சிவக்குமார்
 
 

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.
கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.
குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.
 தொடர்புக்கு,
பாலமுருகன்,
செல்போன்: 95855-24061.

சேவல் சண்டை – பாரம்பரிய விளையாட்டுப் பற்றி ஒரு தகவல்

சேவல் சண்டை – பாரம்பரிய விளையாட்டுப் பற்றி ஒரு தகவல்

by  • March 1, 2014 • 0 Comments

cock-fight-300x200 

சேவல் சண்டையில் இருவகை உண்டு
1. வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை.
2. கத்திகால், கத்திக் கட்டு சேவல் சண்டை
இவ் இரண்டு வகைச் சண்டைக்கும் இரண்டு வெவ்வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப் படுகின்றன.  இவ் இரண்டு வகை சண்டைச் சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம்.  இது  சாமானியனுக்குத் தெரியாது.  ஆனால், சேவல் சண்டைக் காரர்களுக்கு எளிதாகவே  தெரிந்துவிடும்.
குறிப்பு: தமிழ்நாட்டில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. பன்டைய காலத்தில் சேவல் சண்டை பாரம்பரிய விளையாட்டாகவே கருதப்பட்டது. ஆகவே, இப்புதியத் தலைமுறையினருக்கு சேவல் விளையாட்டு பற்றிய தகவலினை  அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வெற்றுகால் சேவல் சண்டை
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை,  பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்றுக் கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்பட்டுள்ளது.   தமிழ் சினிமாவின் “ஆடுகளம்” திரைப்படத்தில் வந்த சேவல்கள் அனைத்தும் வெப்போர் சேவல்கள் ஆகும்.

வெப்போர் சேவல்கள் மிகவும் கட்டு மஸ்தான உடல்வாகுடன் இருக்கும்.  சில சேவல்கள் இரும்பைப் போன்ற கழுத்துடன் இருக்கும்.  வெப்போர் சேவல்களை அசில் (asil அல்லது aseel)
என்று அழைகின்றனர் காரணம் “ அசில்” என்ற சொல் “ அசல்” என்ற சொல்லின் திரிபே ஆகும்.  அதற்குச் “ சுத்தமான” அல்லது “ கலப்படம் இல்லாத” என்று அர்த்தம். இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும்தான் சண்டை சரியாகச் செய்யும்.  வெப்போர்  சேவல்களைப் பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம்.   பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன.  இவற்றிற்குச் சண்டைப் பயிற்சியளிக்கும்போது அந்தக் குணம் மேலும் மெருகேற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்க வேண்டும் என்று அவற்றிற்குத் தெரியும்.  இவ்வகைச் சேவல்களுக்கு உடம்பே ஆயுதம்.  காலில் உள்ள நகங்கள் கட்டை விரலுக்கு மேல் மாட்டுக் கொம்பினை  ஒத்ததாக நகமும் வளர்கிறது.  இதனை “ முள் “ என்று கூறுகின்றனர்.  இந்த  “ முள் “
சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டுச் சேவல் சண்டை , என வெவ்வேறு இடத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது.  ஜல்லிக்கட்டுக் காளைகளை  எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ  அதே போல, சண்டைச் சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.

பொதுவாகவே சேவல்களுக்குச் சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை  உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும்.அதனால் அவற்றைச் சண்டையிடச் செய்வது என்பது பயிற்சியாளர்களுக்குப் பெரிய கஷ்டம்  இல்லை. சண்டைப் பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்குக்  கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை,  பாதாம், பிஸ்தா, முந்திரி,ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
அம்பின் முனைபோன்று கூர்மையாக்கப் படுகின்றது.  சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரிச் சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.  அடி தலையில் பட்டால்  மூளை சிதறிவிடும்.  கழுத்தில் உள்ள எலும்புகள் கூட உடைந்து சேவல்கள் இறப்பது உண்டு.    வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும்.  மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.
சண்டைக்குப் பலமாதங்களுக்கு முன்னரே சேவல்கள் தயார்செய்யப்படும். பிறந்ததில் இருந்தே பேணிப் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.  6 மாதத்தில் இருந்தே சண்டை ஒத்திகை பார்க்கப் படும். இதை “டப்னி” என்று கூறுவர்.  இதில் நல்ல சேவல்களை மட்டும் விட்டுவிட்டு  மற்றவற்றை விற்காமல் கொன்று விடுகின்றனர்.  இதற்குக் காரணம் அவர்கள் வேண்டாம்  என்று விட்ட சேவல்களின் அடுத்த தலைமுறையில் எதிர்பார்த்த பண்புகள் வரலாம்.  அப் பண்புகள் எதிராளியின் கைகளுக்குப் போகக்கூடாது என்று அதனைக் கொன்றுவிடுவர்.

சண்டைக்குத் தயார்படுத்தும் வகையில் சேவல்களுக்குக் கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு போன்ற தானியங்களை அரைத்து அதைச் சுட வைத்துப் பின்னர் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உரிமையாளர்கள் கொடுக்கின்றனர்.  இது தவிர பாதாம், பிஸ்தா, பழங்கள், சாரப்பருப்பு, முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவற்றையும் சேவல்களுக்குக் கொடுக்கின்றனர்.
சேவல் சண்டைக்கு 21 நாட்கள் முன் சிறப்புத் தயார் நடக்கும்.  அப்போது மிகவும் சத்தான உணவுகளுடன் நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்றவை பயிற்சியளிக்கப் படும்.  பின்பு சண்டைக்குக் களம் இறக்கப்படுகின்றது.போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட சேவல்கள் உயரம் முதலில் பார்க்கப்படுகின்றன.  உயரத்திற்கு ஏற்ப சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன.

ஒரு வெப்போர் சேவல் சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் சண்டை போட வேண்டி இருக்கும். 15 நிமிடங்கள் போர் செய்தபிறகு 15 நிமிடங்களுக்கு இடைவேளை இருக்கும். இவற்றைத் ‘தண்ணிக்கு எடுப்பது’ என்று கூறுகின்றனர்.  அப்போது காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலிஒத்தடம் கொடுக்கப்படுகின்றது.  பின்னர் க்ளுகோஸ் போன்றவைத் தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் புதுத்தெம்புடன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றது.சண்டை நேரம்  15 நிமிடம் (சண்டை) + 15 நிமிடம் (தண்ணீர்) + 15 நிமிடம் (சண்டை) + 15 நிமிடம் (தண்ணீர்)+ 15 நிமிடம் (சண்டை) 15 நிமிடம் (தண்ணீர்)+ 15 நிமிடம் (சண்டை) + 15 நிமிடம் (தண்ணீர்) = மொத்தம் 1.45 மணி (முழு சண்டை நேரம்) நேரம் ஒரு சண்டை  நடைபெறுகின்றது.நல்ல தரமான சேவல் வகைகள் எதிர்ச் சேவலை 3 நிமிடங்களில் கூடக் கொல்லமுடியும்.  இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுப் பரிசு வழங்கப்படும்.  இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் விலை போகும்.  வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.வெற்றி பெற்ற சேவல்களுக்குத் தங்க நாணயம், பணம், கேடையம், மெடல் போன்றவை பரிசாக  வழங்கப்படும்.  ஆடுகளம் படத்திற்குப் பிறகு இவ்வகைச் சேவல்களுக்கு மவுசு கூடிவிட்டது. இவ்வகைச் சேவல்களில் பலவகைகள் உண்டு.  அவை பொதுவாக ரேஜா (குள்ளமான சேவல்கள்) கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும் அவைகள் அவற்றின் சிறகின் வளங்களைப் பொறுத்தே அழைக்கப்படுகின்றன

ஜாவா==>பச்சை வெள்ளை வண்ணம் மற்றும் கருப்பு வால்
யாகுத்==> சிவப்பு
பீலா ==> மஞ்சள்
தும்மர் ==> சாம்பல்
சபீ==>வண்ணப் புள்ளிகள்
நூரி==> வெள்ளை
கதிர்/காதர்==>கருப்பு .

இவை மட்டுமின்றி “பேட்டை மாதிரி (பேட்டை போன்று காட்சியளிக்கும்)” “ கல்வா (தாடியுடன் இருக்கும்)”  ஆகிய வகைகளும் உள்ளன. வெப்போர் சேவல்களுடன் கத்திக்கால் சேவல்களைச் சண்டைக்கு விட முடியாது காரணம் கத்திக்கால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராகச் சண்டை போட முடியாது.  சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும்.

கத்திச் சேவல் சண்டை
சேவலின் வலதுகாலில் இதற்காகச் சிறு கத்தி கட்டப்படுகிறது.  பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துககொண்டு இரு  சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர்.  இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோமாக மோதுகின்றன.  மோதலில் காயமடையும் சேவல்களுக்குக் குடிப்பதற்குத்  தண்ணீர் அளித்து, தண்ணீரை வைத்து சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போல தண்ணீரை ஊற்றியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர்.   போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன.   தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு.  கத்தி கட்டிற்குப் பயன்படும் சேவல்கள் கட்டுச்  சேவல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கத்திச் சேவல்களுக்கு வால் நீளமாக இருக்கும். இவற்றுள் பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த  வகைகளாகக் கருதப்படுகின்றன.  நிறத்தைப் பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை… கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக்கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக் கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு, சித்திரப்புள்ளி நூலாவள்ளுவர், ஆந்தை, மயில் ஆகும்.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன.   கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள் எனப்படுகின்றன.  கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக்  கொண்டவை காகச் சேவல்கள்.  கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள்.  கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை  பேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன.  பழுப்பு நிறத்தை உடையவை பொன்நிறம் என்பனவாகும்.  சாம்பல் நிறத்தைப்  பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல்,  கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரமாக அழைக்கப்படுகின்றன.  அதேபோலக் கால்களைப் பொறுத்தும், பல  வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர்.  வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால்,  காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப் பட்டியல் இடப்படுகிறது.போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக்  கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர்.  இதற்கு’ நடவு போடுதல்’ என்று பெயர்.  நடவு போடுதல் செய்த பின்பு  எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதேநெறி, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவல்களுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டிவிடுவர்.சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் அவற்றை நிறுத்துவர். அப்பொழுது இரு சேவலும் ஒன்றையயான்று பார்க்கும் படி இருக்கும்.  இதற்கு “முகைய விடுதல்” என்று பெயர்.  அது தான் உன் எதிரி என்று அடையாளம் காட்டுவது போல் இது இருக்கம்.

இந்நிலையில் இரு சேவல்களும் ஒன்றையயான்று நோக்கி ஓடி வந்தும், பறந்தும் காலில் கட்டியுள்ள கத்தியால் மற்றதன்  உடல் பகுதியில் குத்தியும் பல காயங்களை ஏற்படுத்தும்.  அப்போது தொடர்ந்து சண்டையிடாமல் சேவல் விடுவோர்  தத்தம் சேவல்களைக் கையில் பிடித்துக்கொள்வர். அதற்குத் தண்ணீர் தந்து களைப்பை நீக்குவர்.  ஈரத்துணியால்  காயங்களைத் துடைத்து மருந்திடுவர்.  மீண்டும் சேவலின் முதுகில் தட்டிக் கொடுத்து களத்தில் விடுவர்.

கத்திக்கால் சேவல்கள் பெரும்பாலும் எதிர் சேவலின் நெஞ்சுப் பகுதியைத் தாக்கும்.  சில நேரங்களில் எதிர் சேவலின் குடல்  சரிந்து இறக்கும் அளவிற்கு தாக்குதல் இருக்கும்.  முதலில் வேகமாக நொடிப் பொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிக்கின்றது.
போரிட்டுகொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல் முடிவே இவ் விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவுசெய்கிறது.   இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்து விட்டாலோ, களத்தைவிட்டு ஓடி விட்டலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றி அடைந்ததாகிறது.  தோற்ற சேவல் உயிருடனோ இறந்த நிலையிலோ வெற்றி அடைந்த சேவலின் உரிமையாளருக்குக் கிடைக்கிறது.  இதற்கு “ கோச்சை “ என்று பெயர். சேவல் சண்டைப் போட்டியில் சேவல் காலில் கட்டிய கத்தி குத்தி பலியாவதுண்டு.  ஆதலால் மிகவும் பாதுகாப்புடன் சண்டைக்கு விடுவது அவசியம்.பல அறிய இனச் சேவல்கள் இந்த சேவல் போராளிகள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.  இச் சேவல்களை வளர்ப்பதே பெரிய கெளரவமாகக் கருதப்படுகின்றது.  இன்று உலக மக்களுக்குப் புரதப் பற்றாகுறையினைச் சரிசெய்யும் “ ப்ரைலெர் கோழிகள்” இந்த  சண்டைக் கோழி இனத்தையும், பிற கோழி இனத்தையும் கலவை செய்ததால் கிடைத்தனவாகும்.  உலகமே இச் சேவல்களை ஒரு  அரிய பொக்கிமாகப் பார்கின்றனர்.  இதன் மூலமாகப் பல பயனுள்ள கோழி வகைகள் ( ரோட் ஐலண்ட, கார்னிஷ், ப்ரைலெர்(etc) ஆராய்ச்சி மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.

சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தீன், அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள்  தொழிலாக வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கின்றன.   கிராமங்களில் பொழுது போக்காக இருக்கிறசேவல் சண்டை நகரங்களில் சூதாக மாறி விடுகிறது.திருச்சிராப்பள்ளிக்கு முன்பு உறையூர் என்ற ஒரு ஊர் உண்டு.  கரிகாற் சோழன் யானை மீது பவனி வரும்போது ஒரு கோழி  யானையிடமிருந்து தன் குஞ்சுகளை காக்க யானையுடன்  போர் செய்து துறத்தியுள்ளது.  அது கண்ட சோழன் அங்கு கோட்டை கட்டி ‘வீரம் உறையும் ஊர்’ என உறையூர் எனப் பேரிட்டு தலைநகரும் ஆக்கினான். அதற்குக் ‘கோழி ‘யூர் என்ற பெயரும் உண்டு 108 திவ்விய தலங்களில் இதுவும் ஒன்றே.கோழி‘ பொதுச் சொல், பெட்டைக் கோழி, சேவற் கோழி என்று தான் அழைக்க வேண்டும்.  கோழி கூவியது (ஆண்) கோழி  முட்டை இட்டது (பெண்) இது இலக்கண விஷயம்.

நாட்டுக் கோழி... நமக்கேற்ற தோழி...

நாட்டுக் கோழி... நமக்கேற்ற தோழி...

By S.V.P. வீரக்குமார்
First Published : 24 June 2015 10:00 AM IST

றைச்சிக்கோழி... இன்று கோடிகளில் விற்பனை ஆகும் புரத உணவு. மாநகரத்து ஐந்து நட்சத்திர உணவு விடுதி முதல் பேருந்துகூட செல்ல இயலாத கடைக்கோடி குக்கிராமம் வரை எளிதில் கிடைக்கக்கூடிய மாபெரும் சந்தையை உடைய தொழில்.

மிகப்பெரிய சந்தையும், உற்பத்தியும் உடைய இந்த இறைச்சிக் கோழி ஆறு வாரங்களில் இரண்டு கிலோவுக்கும் மேல் உடல் எடையை அடையும் இறைச்சி இயந்திரமாக இருக்கின்றன. இந்த ஆறு வார கோழிக் குஞ்சின் இறைச்சியில் அப்படி என்ன சுவையையும் மணத்தையும் எதிர்பார்த்திட முடியும்?

தான் உண்ணும் தீவனத்தை இறைச்சியாக மாற்றும் ஒரு உயர் இயந்திரம்தான் பிராய்லர் என்று அழைக்கப்படும் இறைச்சிக் கோழி. சுதந்தரக் காற்றைச் சுவாசித்து அறியாத பறவைகள் இவை. இறக்கை பறப்பதற்கும், கால்கள் விரைவாக ஓடிச் செல்வதற்கும் பயன்படும் என்பதை மறந்துவிட்ட பறவைகள். குஞ்சு பொறிப்பதில் இருந்து இறைச்சிக்காக கூண்டுகளில் அடைக்கப்படும் வரை எல்லாமே இயந்திரமயமாகவும், செயற்கை மயமாகவும், ரசாயனமயமாகவும் வளர்க்கப்படுபவை இறைச்சிக் கோழிகள். இந்தக் கோழிகளின் இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்களுக்கும், இந்தக் கோழிகளின் கழிவுகளைச் சாப்பிடும் நாய் போன்ற பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம்...

நாட்டு மாடுகள், நாட்டு ஆடுகள் என்று நாம் மறந்துவிட்ட கால்நடைச் செல்வங்களின் வரிசையில் நாட்டுக் கோழிகளையும் கொண்டுவர வேண்டும். நம் நாட்டு இனங்களைப் பற்றி நினைத்தாலோ, பேசினாலோ, எழுதினாலோ பழமைவாதம் எனப் பலர் பேசுகின்றனர். நஞ்சற்ற உலகை மீட்டெடுக்க பழமைவாதமே சரியான தீர்வு.

முன்னேற்றம், தொழில்நுட்பம் என்ற பெயரில் கூண்டுகளில் அடைத்து வளர்க்கப்படும் முட்டைக்கோழிகளும், இறைச்சிக் கோழிகளும் நம்முடைய இறைச்சி மற்றும் முட்டைத் தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். இறைச்சி விலை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால், இவை இயற்கைக்கு முரண்பட்டு எவ்வளவு பெரிய சமூக, பொருளாதார, உணவுக் கலாசார மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன என்பதை நான் உணரவில்லை.

இந்தக் கூண்டுக் கோழிகளும், இறைச்சிக் கோழிகளும் வருவதற்கு முன் சந்தை அமைப்பு எப்படி இருந்தது. சின்னஞ் சிறிய குக்கிராமங்களில் புறக்கடையில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக் கோழிகளும், உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முட்டைகளும் கூடை வியாபாரிகளால் வாங்கப்பட்டு, பெரு நகர சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, பெரிய வியாபாரிகளால் மொத்தமாக சேகரிக்கப்பட்டு நகரத்து வீடுகளுக்கும், உணவகங்களுக்கும் பயணித்தன. கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கிய பொருள் நகர்வும், நுகர்வும் என ஆரோக்கியமான வியாபாரம் இருந்தது.

ஆனால் இன்றைய நிலை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தின் முட்டை தலைநகரமான நாமக்கல்லில் இருந்து புறப்படும் முட்டை லாரிகள், கிராமம் தவறாமல் கடை கடையாக முட்டை போட்டுக்கொண்டு செல்கின்றன. தத்தித் தவழ்ந்து செல்லும் பிராய்லர் கோழிகள், கறிக்கடைதோறும் இறக்கிவிடப்படுகின்றன. கோழி வளர்ப்பில் இருந்த கிராமப் பொருளாதாரம், கார்ப்பரேட் பொருளாதாரமாக மாறிவிட்டது.

நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது பெரிய விஷயமில்லை. படிப்பறிவும், பெரிய விஞ்ஞான அறிவும் இல்லாத கிராமத்து ஏழைப் பெண்ணால், ஒரு ஆண்டுக்கு ஒரு ஜோடி கோழியையும், சேவலையும் வைத்து 75 முதல் 80 குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும். சில இறக்கும். சிலவற்றை நாய், நரி, கழுகு தூக்கிக்கொண்டு போகும். சில திருடுபோகும். இருந்தாலும், நிகரலாபம் நிச்சயம் இருக்கும்.

நாட்டுக் கோழி பொருளாதாரம், என்றும் நஷ்டம் இல்லாத பொருளாதாரம். கொஞ்சம் விஞ்ஞானத்தையும் கொஞ்சம் அனுபவத்தையும் கலந்து நாட்டுக் கோழி வளர்த்து வெற்றிகரமாக பண்ணையம் செய்வோர் பலர். அவர்களின் வெற்றிப்பயணத்துக்கு என்னென்ன செயல்முறைகள் உதவின? இதில் வெற்றியைத் தொடுவது எப்படி? இது இயற்கைக்கு உகந்ததா? என்பது போன்ற கேள்விகளோடு, பழநி வட்டம், மரிச்சிலம்பு கிராமத்தைச் சேர்ந்த பிடிஎன் போல்ட்ரி ஃபார்ம் உரிமையாளர் பி.தாமோதரன் என்பவரைச் சந்தித்தோம்.
 
கோழிகளுக்கும் இவருக்குமான தொடர்பு 2002-ம் ஆண்டு ஏற்பட்டது. இறைச்சிக் கோழிகளை (பிராய்லர்) வளர்த்து பணத்தை அள்ளிக் குவித்துவிடலாம் எனப் புறப்பட்ட இளைஞர் படையில் இவரும் ஒருவர். 2006-ம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் இறைச்சிக் கோழிகளை வளர்த்தவர். விற்பனைப் பந்தயத்தில் எவ்வளவு வேகமாக ஓடினாலும் வெல்பவர் என்னவோ பந்தயத்தில் கலந்துகொள்ளாத நபர்தான். இது இவரை யோசிக்கவைத்தது.

கையில், இறைச்சிக் கோழிகளுக்காக அமைக்கப்பட்ட இரண்டு ஷெட்கள் இருந்தன. ஐந்து ஆண்டுகால இறைச்சிக் கோழி வளர்ப்பு அனுபவம் இருந்தது. இவை இரண்டையும் மூலதனமாக வைத்து, தன்னுடைய எதிர்காலத்தை அவர் முடிவு செய்தார். நாட்டுக் கோழி வளர்ப்பை நோக்கி இவரது பார்வை திரும்பியது.

கோழி வளர்ப்பை கேவலமாக எண்ணிய காலம் இருந்தது. கோழி வளர்ப்பை ஒரு தொழிலாக எவரும் அங்கீகரிக்கவில்லை. கோழிப் பண்ணை வைத்திருப்பதை ஒரு கௌரவமான தொழில் என நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோழிப் பண்ணைத் தொழில் ஒரு முழு நேரத் தொழில். கூலிக்கு மாரடிக்கும் தொழில் அல்ல. 365 நாட்களும் வேலை செய்ய வேண்டும். ஞாயிறு விடுமுறை இல்லை. வாரத்தின் ஏழு நாள்களும், ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனமாகச் செயல்பட வேண்டும். தனிப்பட்ட கவனம் இருக்க வேண்டும். தொழில் பக்தியும், ஈடுபாடும் இருக்க வேண்டும்.

இத்தனை வேண்டுகளும் தாமோதரனிடம் இருந்தன. 100 சதவீதம் சுத்தமான நாட்டுக் கோழிகளை வளர்க்க வேண்டும் என முடிவு செய்து, கிராமப் பகுதிகளில் அலைந்து திரிந்து, தாய்க் கோழிகளையும், சேவல்களையும் தேர்வு செய்தார். அவற்றைக் கொண்டு தனது புதிய கோழிப் பண்ணையைத் தொடங்கினார். அவரே ஒரு தீவன தொழிற்சாலையை நிறுவி, தனது வளர்ப்புக் கோழிகளுக்காக நேர்த்தியான தீவனத்தை உற்பத்தி செய்யத் தொடங்கினார்.

அடுத்தது இனப்பெருக்கம். தரமான நாட்டுக் கோழி முட்டைகள் கிடைத்தன. ஆயிரக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி செய்ய, அடைகாக்கும் தாய்க் கோழிகளை மட்டும் நம்பினால் பயன் இருக்காது. விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க ஒரு இன்குபேட்டர், ஹேட்ச்சர், இவை தடையில்லாமல் இயங்க மின்சார ஜெனரேட்டர் என ஒரு முழுமையான ஹேட்ச்சரி உருவானது. வாரம் 30 ஆயிரம் முட்டைகள் பொரிக்கத் தக்க இன்குபேட்டரும் ரெடியானது.

நாட்டுக் கோழியுடன் காடை, வான்கோழி வாத்து, கிண்ணி கோழி என பல வகை பறவைகளும் இந்தப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவருடைய பண்ணையில் இருந்து குஞ்சுகளை வாங்கி வளர்த்து, பல விவசாயிகள் இன்று பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

அப்படி என்ன லாபம் கிடைத்துவிடும் என்ற கணக்கைப் பார்க்கலாமா?
இவருடைய ஹேட்ச்சரியில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் (ஹேட்ச்சிங் டே) கோழி, வான்கோழி, வாத்தி, கிண்ணி கோழிக் குஞ்சுகள் கிடைக்கும். காடைக் குஞ்சுகள் புதன்கிழமைதோறும் கிடைக்கும்.

நாட்டுக் கோழிக் குஞ்சு ரூ.22, காடைக் குஞ்சு ரூ.5, வான்கோழிக் குஞ்சு ரூ.40, வாத்துக் குஞ்சு ரூ.30, கிண்ணி கோழிக் குஞ்சு ரூ.22 என்ற விலையில் கிடைக்கின்றன. குஞ்சுகள் அனைத்தும் தடுப்பு ஊசி போடப்பட்டே விற்கப்படுகின்றன.

நாட்டுக் கோழி, 75 நாளில் இருந்து 90 நாளில் ஒண்ணேகால் கிலோ எடையை அடையும். இதுதான், நாட்டுக்  கோழி விற்பனைக்கு உகந்த எடை.

ஒரு கோழிக் குஞ்சின் விலை ரூ.22, தடுப்பு ஊசி மருந்து ரூ.2, ஒண்ணேகால் கிலோ எடை வரை வளர்க்க மூன்று கிலோ தீவனம் தேவை. அதன் விலை ரூ.48, கோழி வளர்ப்புக் கூலி ரூ.3 என மொத்தம் ரூ.75 ஆகிறது.

பொதுவாக, சில்லறை விற்பனையில் உயிருள்ள நாட்டுக் கோழி கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கலாம். ஆயிரக்கணக்கில் வளர்த்து விற்கும்போது, மொத்த வியாபாரியிடம்தான் விற்கவேண்டி உள்ளது. அப்படி மொத்தமாக விற்கும்போது, விற்பனை விலை கணிசமாகக் குறையும். அப்படி கிலோவுக்கு ரூ.200 என்று விற்றாலே, ஒண்ணேகால் கிலோ கோழியை ரூ.250-க்கு விற்கலாம். செலவு ரூ.75 போக, ஒரு கோழிக்கு ரூ.175 கிடைக்கும்.
ஒரு கோழிக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறதே என்று நினைக்கும் அதே நேரத்தில், அதை வளர்த்தெடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
முதலாவது, கோழிகளுக்கான வீடு அமைப்புக்கும், தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அடைத்து வளர்க்காமல் மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை நல்லது. அப்போதுதான் தீவன செலவு கட்டுப்படும். வெளியில் அலைந்து திரிந்து, மண்ணை கிண்டிகிளறி புழு, பூச்சிகள், புல் பூண்டுகளை தின்று வளரும் கோழிதான், சதைப்பற்றுடனும் மணமான இறைச்சியுடனும் இருக்கும். வளர்ச்சி கொஞ்சம் தாமதமாக இருந்தாலும், இந்த முறைதான் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு ஏற்றது.
ஆனால், தாய் இன்றி இளம் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பத்தில்  புரூடிங் எனும் செயற்கை வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். புரூடிங் காலத்தில் வெப்பத்தைக் கொடுக்க கரிப்பானை அல்லது மின் விளக்கைப் பயன்படுத்தலாம். காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதுமானது. தண்ணீருக்கு நிப்பிள் ட்ரிங்கர் அல்லது ஆட்டோமேட்டிக் ட்ரிங்கர் அமைக்கலாம். இயற்கை முறையில் வளர்க்கிறேன் என்பதற்காக சுத்தமும் சுகாதாரமும் இல்லாத தண்ணீரைக் கொடுக்கக்கூடாது.

கோழிக் குஞ்சுக்குத் தேவையான வெப்பம்
வயது (நாளில்) தேவையான வெப்பம்
1 - 4 32 டிகிரி - 33 டிகிரி
5 - 7 30 டிகிரி
8 - 14 28 டிகிரி
15 - 21 26 டிகிரி
22 - 28
24 டிகிரி

நூறு கோழிக்குத் தேவையான குடிதண்ணீரின் அளவு
வயது (வாரத்தில்) தண்ணீரின் அளவு
1 2 லிட்டர்
2 4 லிட்டர்
3 6 லிட்டர்
4 8 லிட்டர்
5 10 லிட்டர்
6 12 லிட்டர்
7 14 லிட்டர்
8 16 லிட்டர்

கடும் கோடைக்காலத்தில் தண்ணீரின் அளவு இரு மடங்கு ஆகலாம். குளிர்க்காலத்தில் தண்ணீரின் அளவு பாதியாகக் குறையலாம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தண்ணீர் இல்லாமல் கோழிகளால் உயிர் வாழவோ, உடல் எடையை அதிகரிக்கவோ முடியாது.

நாட்டுக் கோழிகளுக்கு இயற்கையிலேயே எதிர்ப்புச் சக்தி அதிகம் என்றாலும், கோடைக்காலத்தில் வரும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்கினால், கொத்துக் கொத்தாக செத்து மடியும். ஒரே வாரத்தில் பண்ணையே காலியாகிவிடலாம். அதற்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மருந்தை கோழிகளுக்கு சரியான முறையில் அவசியம் போட வேண்டும்.

பிராய்லருக்குக் கொடுப்பதுபோல் தீவனம், வளர்ச்சி ஊக்கிகள் போன்றவற்றை நாட்டுக் கோழிகளுக்குக் கொடுக்கக்கூடாது. பலவகை கீரைகளை உணவாகக் கொடுக்கலாம். மனிதர்களின் உணவைத் தவிர்த்த தானியங்களை கோழித் தீவனமாகக் கொடுக்கலாம். தீவனத்தில் போதுமான நார்ச்சத்து இல்லையென்றால் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும். ரத்தத்தின் சுவையை உணர்ந்துவிட்டால், நோஞ்சானாக இருக்கும் கோழியை எல்லாக் கோழிகளும் கொத்திக் கொன்று தின்றுவிடும். ஒன்றுக்கொன்று கொத்திக்கொள்கின்றனவே என்று சிலர் மூக்கு வெட்டும் கருவியால் மூக்கின் கூரான பகுதியை வெட்டி தீய்த்துவிடுவார்கள். இவ்வாறு செய்தால், கொத்துவது குறையும். ஆனால், மூக்கு வெட்டிய கோழியை பண்ணைக் கோழி என்ற பெயரைச் சொல்லி வியாபாரிகள் வாங்க மறுத்துவிடுவர். ஆகவே, அப்படிச் செய்யாதீர்கள்.

இந்த நாட்டுக் கோழி வளர்ப்பிலும் போலிகள் உண்டு. நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் விற்பனையில் நல்ல லாபம் இருப்பதைத் தெரிந்து பலர் பிராய்லர் கோழிக் குஞ்சுகளை நாட்டுக் கோழிக் குஞ்சுகள் என்று சொல்லி விற்றுவிடுகின்றனர். இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை இனம்கண்டு ஒதுக்குவது நாட்டுக் கோழி வளர்ப்போருக்கு நல்லது.

கோழிக் குஞ்சுகள் வாங்கும்போது, அவற்றின் விலையை மட்டும் பார்க்காமல், தரமான குஞ்சுகளா என்று பார்த்து வாங்க வேண்டும். குஞ்சுகளை வாங்கும்போதே அவை எந்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்பதை கணக்கிட வேண்டும். புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை போன்ற மாதங்களில் கோழி விற்பனை டல் அடிக்கும். அது விரத காலம். அதேபோல் ஆடி, ஐப்படி, பங்குனி, சித்திரையில் கோழி விற்பனை அமோகமாக இருக்கும். ஏனெனில், அது அசைவ காலம்.

நாட்டுக் கோழி வளர்ப்பு நல்ல தொழில். மிகப்பெரிய பண்ணை அளவுக்கு பெரும் முதலீட்டுடன் செய்யாமல், கொட்டகை, மேய்ச்சல் இடத்துடன் கூடிய அமைப்பில், உள்ளூர் விற்பனையைக் கருதி, விற்பனைக் காலத்தையும் முன்கூட்டியே கணக்கிட்டு, உற்பத்தி செலவையும் இறப்பு விகிதத்தையும் குறைத்து நாட்டுக் கோழியை வளர்த்து விற்றால், கோழி நல்ல தோழிதான்.
     
                                 ***