December 23, 2014

பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்!

பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்! 


ண்ணும் கருத்துமாக விவசாயிகளின் நெல்மணிகளை நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமல் பாதுகாத்து கொடுக்கும் பெட்டகமாகவும், கருவூலமாகவும்  விளங்கியவை குதிர், பத்தாயம் போன்றவை.
தமிழர்களின் வாழ்வில் நீண்டநெடுங்காலமாக உணர்வுப்பூர்வமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் தொன்றுதொட்டு அங்கம் வகித்து வந்தன. நமது முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவும், தொலைநோக்குப் பார்வையும் இவற்றில் மிளிர்கிறது. 

உணவின் மகத்துவம் கருதி, அதை எந்த அளவிற்கு  முன்னெச்சரிக்கையோடும், மரியாதையோடும் பாதுகாத்தார்கள் என்பதற்கான பளிச்சிடும் வெளிப்பாடு இவை.
25 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமிலலாது டெல்டா மாவட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், இன்று இவை இருக்கும் இடங்களை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. இவற்றின் மகத்துவம் அறிந்த சில விவசாயிகள், இப்பொழுதும் கூட இதனை பராமரித்தும், பாதுகாத்தும், பயன்படுத்தி வருகிறார்கள்.

பெரும் செல்வந்தர்கள் மட்டுமல்ல... நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுமே கூட,  கடைகளில் அரிசி வாங்குவதையே கவுர குறைவாக கருதிய கால கட்டம் அது. நெல்லை வாங்கி பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகளில் கொட்டி வைத்து, அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆலைகளில் அரிசியாக அரைத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
காலப்போக்கில் நவநாகரீக வாழ்க்கை முறையால் பத்தாயமும், குதிரும் விரட்டியடிக்கப்பட்டன. “இடத்தை அடைச்சிக்கிட்டு இருந்துச்சு... அதான் வேண்டாம்னு எடுத்துட்டோம்“ என சொல்பவர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பெரிய அளவில் வெற்றிடம் உருவானது. அதிக விலை கொடுத்து அரிசி வாங்கத் தொடங்கினர்.
அடுத்தக் கட்டமாக, வெளிமாநிலங்களில் பணவெறியோடு அளவுக்கதிகமான ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கொட்டி  வியாபாரிகளே முன் நின்று உற்பத்தி செய்யக்கூடிய, பாலீஸ் செய்யப்பட்ட, சத்து இல்லாத சக்கை அரிசி தமிழ்நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தற்போது முழுமையாக எல்லோருடைய வீடுகளிலும் உலா வருகிறது. கிராமப்புறங்களிலும் கூட மைசூர் பொன்னிக்குதான் முழுமையான முதல் மரியாதை.

இதெல்லாம் ஒருபுறமிருக்க... பத்தாயம், குதிர் இல்லாத விவசாயிகள்,  தங்களுடைய நெல்லை சாக்கு மூட்டைகளில் வைப்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவி நெல்லின் தரத்தை சீர்குலைக்கிறது. கடுமையான கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் கட்டு விடுதல் என்ற பிரச்னை உருவெடுத்து, நெல்லில் கோடுகள் உருவாகும். இதுபோன்ற நெல்லை அரைக்கும் போது குருணை அதிகரித்து, அரிசியின் அளவு குறையும். இதையெல்லாம் விட உச்சக்கட்ட பிரச்னை எலி தொந்தரவு. சாக்கு மூடடைகளை ஓட்டைப் போட்டு, ருசி பார்த்து வேட்டையாடிவிடுகிறது.


சாக்கு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள், அந்துப்பூச்சி களின் தாக்குதலுக்கும் ஆளாகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி நெல்லை இருப்பு வைத்துக் கொள்ள முடியாமல், அவசர கதியில் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை, வியாபாரிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தி, விவசாயிகளை சுரண்டுகிறார்கள்.  நெல் மணிகளை சேமித்து வைக்க முடியாததால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லை, பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வெளியில் வாங்குகிறார்கள். உதாரணமாக, 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை சுமார் 900 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, தரம் குறைவான 30 கிலோ விதை நெல்லை 900 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி விதைப்பு செய்கிறார்கள்.

பூச்சி, பூஞ்சாணம், எலி, பனி, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்துப் பிரசனைகளில் இருந்தும் விவசாயிகளை கைத்தூக்கி விடக்கூடிய உதவும் கரங்களாக... பத்தாயம், குதிர், கோட்டை உள்ளிட்டவைகளை திகழ்கின்றன. பத்தாயம், குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணம், நம்மை வியக்க வைக்கிறது. பல அடி உயரம் கொண்ட பத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லை கொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும். மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200 மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள்.

மண்ணால் ஆன உறைகளை [உருளை} கொண்டு செய்யப்பட்டவை  குதிர். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளை களும் அமைக்கப்பட்ட பிறகு இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். இதனால் எலி கடிக்காது. அவ்வபோது தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ் பகுதியில் திறந்து மூடும் அமைப்பு இருக்கும்.

முழுமையாக நெல் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு, உறைகளை லேசாக அசைத்தாலே தனிதனியாக பிரித்து எடுத்து விட்டு, நெல்லை நிரப்பி மறுபடியும் அமைத்துக் கொள்ளலாம். குதிர், பத்தாயம் இவைகளில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 3,5,7,9,12 என ஒற்றைப்படையில் தான் அமைப்பார்கள்.
விதைநெல்லின் முளைப்புத்திறன் நீண்டகாலத்திற்கு நீடித்து நிலைக்க, வைக்கோலை தரையில் பரப்பி, அதனை சுற்றிலும் வைக்கோல் பிரிகளை கொண்டு கோபுரம் போல் கோட்டை கட்டப்படும். இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். விதைநெல் தேவைப்படும்போது, இந்த கோட்டையை தண்ணீரில் மூழ்க வைத்து, நன்கு ஊறியதும், அதனை அப்படியே நாற்றங்காலில் போடுவார்கள். வைக்கோல், சாணம் இரண்டு மே உரமாக கைக்கொடுக்கும்.

இது எல்லாமே பழங்கதையாகி, அருங்காட்சியக பொருட்களாக மாறி வருகின்றன... புதிதாய் பிறப்பெடுக்கும் நெல்மணிகளோ, பாதுகாப்பான சூழல் தேடி ஏக்கத்தில் தவிக்கின்றன. குதிர், பத்தாயம், கோட்டையின் தேவை இன்று அவசியமாகிறது.

-கு. ராமகிருஷ்ணன்
படங்கள்: க. சதீஸ்குமார்

நினைவுச் சின்னங்களாக நிற்கும் சேமிப்புக்கலன்கள்...

நினைவுச் சின்னங்களாக நிற்கும் சேமிப்புக்கலன்கள்...

 
 'குதிர்', 'தொம்பை', 'பத்தாயம்', 'குலுமை'...
இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்! தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் இவையும் அடக்கம்! நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல... சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன!

இந்தச் சூழலில்... பாரம்பர்யத்தை மறக்காமல், இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பது ஆறுதலான விஷயம். அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி.

''ஒரு காலத்துல வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையிலதான், உப்பு, புளி, மிளகாய்னு போட்டு வெச்சுருப்போம். அதுல விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா... கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் எவர்சில்வர் சாமான்செட்டு வந்த பின்னாடி, அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.

அறுவடை பண்ணிட்டு வர்ற நெல், தானியங்களைக் கொட்டி வெக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்ணெண்டு அடி உயரம் வரைகூட இருக்கும். வரகு வைக்கோல்ல களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அதுமேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா... வருசக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெயெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா... பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு பயன்படுத்திக்கிட்டிருக்கேன் பல வருஷமா!

வீட்டுத் தேவைக்குதான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா... பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைங்கள வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பா இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருஷக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்ப இதெல்லாம் கண்ணுல சிக்குறதேயில்லை'' என்று ஆதங்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு ஜெயராமன், இப்போதும்கூட பாரம்பர்ய முறைப்படி விதைகளைச் சேமித்து வருபவர்களில் ஒருவர்.

''அறுவடை செய்யுறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காயவெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்குமேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வெப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை, இல்லனா... சிவராத்திரி அன்னிக்கு விதைநெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருஷம் வரைக்கும் விதைநெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே... பெரிய அளவுல விதைநெல் சேமிக்கணும்னா... அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு, காசு கொடுத்து பாக்கெட் பாக்கெட்டா வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க'' என்று உதட்டைப் பிதுக்கினார்.

பாரம்பர்ய வேளாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மைப் புல இணைப் பேராசிரியர் சுந்தரமாரி. அவரிடம் பழங்கால சேமிப்பு முறைகள் பற்றிக் கேட்டபோது, ரொம்பவே சுவாரஸ்யமாகிவிட்டார்.

''விதைக்காக சேமிக்கற தானியங்கள மணல் இல்லனா... சாம்பல் கலந்து வெக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சிவிரட்டியா பயன்படும். தரையில வட்டமாவோ, சதுரமாவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.


இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஓரோரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோருங்க. ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அதுமாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்ல.

பெரும்பாலான விஷயங்கள் கையை விட்டுப் போயிடுச்சு. மிச்ச சொச்சமிருக்கற விஷயங்களும் போயிக்கிட்டே இருக்கு. இப்ப ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கறதால... பழைய முறைகளையெல்லாம் கடைபிடிங்கனு விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கோம்'' என்றவர்,

''பார்ப்போம்... காலம்தானே எல்லாத்தையும் தீர்மானிக்கணும்!'' என்று எதிர்பார்ப்போடு முடித்தார்

ஈ எம் பற்றி (E.M.)

ஈ எம் பற்றி (E.M.)


 
ஈ எம் பற்றி
ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம்…80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ,எம். .
இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம்,அசட்டோபேக்டர்,அசிட்டோபேக்டர்,ட்ரைகோடர்மா,சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிகளும்.லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா,ரே பூசணம்,ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களும் உள்ளன…ஈஎம் பற்றி அறிமுகம் போதுமானது.இது கால்நடை வளர்ப்பில் என்ன வகையில் பயன் படுகின்றது என்பதை மட்டும் பார்க்கலாம்.
ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம்.இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம்.இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும்.இதனை வெளியில் வாங்குவது எளிது.
உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.

ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ

செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.

பயன் படுத்தும் முறை
இந்த இரண்டாம் நிலை திரவத்தில் ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து பயன் படுத்தலாம்.இது கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன் படும்.தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.தொழுவத்தின் துர்நாற்றம் குறையும்
ஈஎம் பொக்காஷி எனும் தவிடு உணவு தயாரிக்கும் முறை,தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில் ஏ.ஈ.எம் எனும் இரண்டாம் நிலை திரவத்தை தவிடு புட்டு பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் பிளாஸ்டிக் பாயில் கட்டி வைக்க வேண்டும்.ஒருவாரம் சென்றபின் திறந்து பார்க்கும் போது மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூசனம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி.இதனை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்…
ஒருலிட்டர் தாய் திரவம் சுமார் 300 ரூபாய் வரும்.இதனை சுமார் ஆறு மாதம் வரை பயன் படுத்தலாம்.இரண்டாம் நிலை திரவத்தை 30 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.வாங்கியவுடன் 1 லிட்டர் தாய் திரவத்தையும் பயன் படுத்த வேண்டாம்.நம்முடைய தேவை பயன் பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன் படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயார் செய்யுங்கள்..நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள்.
நான் எனது மண்ணில்லா தீவன வளர்ப்பிற்கும்,தொழுவத்தில் தெளிப்பதற்கும்.கோழிகளுக்கு குடிநீரில் கலப்பதற்கும் தொடர்ந்து பயன் படுத்துகின்றேன்..நல்ல பலன் தான் கொடுக்கின்றது…

யார் தான் வெல்லக்கூடும் இயற்கையை ??

யார்தான் வெல்லக்கூடும் இயற்கையை ??


எவ்ளோ சாணி குட்டு இருக்கு?
என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.

15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று வளர்ந்திருந்தது.4 ஏக்கரா மேட்டுப்பூமி. மீதி 4 ஏக்கரா கத்திரி,வெண்டையெனறு பல காய்கறிகள். முழுக்க இயற்கை விவசாயம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை அவர் அப்பா இரசாயன உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் செய்துவந்தார். என் நண்பர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிததுவிட்டு இரண்டு வருடம் வேலைக்கு போனவர் , கடந்த இரண்டு வருடங்களாக விவசாயத்துக்குள் நுழைந்தவர், கையோடு அப்பாவை சமாதானப்படுத்தி ஆர்கானிக் விவசாயத்தை கையிலெடு துக்கொண்டார்.

ஆரம்பத்தில் பக்கத்து தோட்டக்காரர்கள் எல்லாம் பரிகாசம் செய்ய, அவரது அப்பாவிற்கு இவர்மேல் ஏகத்துக்கும் கோபம். எப்படியோ அவரை சமாளித்து ,இரண்டு ஆண்டுகளில் தலையெடுத்துவிட்டார் நண்பர். சமீபத்தில் ஏதோ ஒரு கல்யாணத்தில் அவரை சந்தித்த உறவினர்கள் அனைவரும் அவரது இயற்கை விவசாயத்தை பாராட்ட அவரது தந்தைக்கு ரொம்பவுமே மகிழ்ச்சி.

“அட கோவு, உன்னோட கத்திரிக்கா எனன டேஸ்ட்டு? உம் மாமா கத்திரிக்கான்னா வாயிலயே வெக்கமாட்டார்..ஆனா, அனனைக்கு உங்க தோட்டத்து கத்திரிக்கா பொறியலை அவரு ஒருத்தரே தின்னு தீத்துட்டார்ன்னா பாரேன்… ” தூரத்து அத்தையொருவர் பாராட்ட, செய்த வேலைக்கு அங்கீகாரம் கிடைத்தது போலிருந்தது நண்பருக்கு.
அதுவரைக்கும் பொறுமையாயிருந்த அவரது பாட்டி, 85 வயது இருக்கும், இப்போது இடைமறித்தார். “தம்பி,நான் ரெண்டுவருசத்துக்கு முன்னயே மேல போயிருக்க வேண்டியது..இருதயம்கூட மெதுவாத்தான் வேல செய்யறதா டாக்டரே சொன்னாரு( நிமிடத்துக்கு40 துடிப்புகள்தான் இப்போதும்…நண்பர் சொன்னது …நானும் கைவைத்து பார்த்தேன்..மிக மெதுவாகத்தான் இருந்தது).ஆனா எம்பேரனோட இயற்கை காய்கறிகளை ரெண்டு வருசமா சாப்பிட்டு , பாரு…எவ்ளோ தெம்பாயிட்டேன்னு.. ” தலை மெதுவாக ஆடினாலும், வார்த்தைகளில் அநாயச உறுதி தெறித்தது.

அதற்குள்ளாக மருந்தடிக்காத இயற்கையாய் விளைந்த பீர்க்கங்காயை தோல் சீவி, வட்ட,வட்ட ஸ்லைஸ் துண்டுகளாக வெட்டி, உப்பு,மிளகாய் பொடி தூவி சாப்பிட குடுத்தார் நண்பரின் அம்மா. வெள்ளரிக்காய் தோற்றது போங்கள் ..அத்தனை சுவை..லேசாக இனிக்கவும் செய்தது…பீர்க்கங்காயை அப்படியே சாப்பிடலாம் என்பதே அப்பொழுதுதான் தெரிந்தது..

60 ஆண்டுக்கு முன்பு நடநத தன்னுடைய கல்யாணத்தை நினைவு கூர்ந்தார் பாட்டி. “என் கல்யாணத்தப்ப, அவரோட(தாத்தாவோட) வீட்டுக்கு எங்க வீட்டு பெரியவங்க எல்லாரும் போயிருந்தாங்க.மாப்பிள்ள வீடு பாக்கணும்ல..அதுக்குத்தான்.. போனவங்க , அவரு வீட்டுல எதை முதல்ல தேடுனாங்க தெரியுமா..? சாணிக் குவியலை.. மாட்டுச்சாலைக்கு பக்கத்துல போட்டுவைச்சிருந்த சாணிக்குவியல்..எவ்வளவு பெரிசு? எத்தனை குட்டுன்னுட்டு..? பாத்துட்டுத்தான் என்னை கட்டிக்கொடுத்தாங்க..
ஏந் தெரியுமா.. ? பாட்டி விடுகதை போட்டார்.

“ஏன் பெரியம்மா? ” தெரியாமல்தான் நானும் கேட்டேன்.

“தம்பி, அந்தக்காலத்துல ஆடு,மாடுதான் ரொம்ப உசத்தி.காசு,பணத்தை யாரு பாத்தாங்க.. ? விவசாயி வீட்டுல சாணிக்குவியல் நிறையா இருந்தா மாடு,கன்னும் நிறைஞ்சுருக்கும்.குடும்பமும் வசதியா இருக்கும்னு பொண்ண நம்பிக்கையா குடுப்பாங்க…” பழைய காலத்துக்கு கூட்டிப்போனார் பாட்டி.
இன்றைய நாகரீக பெண்களோ(ஆண்களும்தான்) சாணியை பார்க்கிற பார்வையே அவர்களது அறுவெறுப்பை சொல்லிவிடுகிறது.மூக்கை பிடித்தபடி நகர்ந்துவிடுகிறார்கள்.

இயற்கையாக வாழ்நத பொழுது தான் எவ்வளவு சந்தோஷமா இருந்தது வாழ்க்கை??

ஆனாலும்..மக்கள் மெல்ல இயற்கையின் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறதை பார்த்தால், எனக்கென்னவோ…இழந்த சுகங்களை,நிம்மதியை மீட்டெடுக்கிற நேரம் வந்துகொண்டிருப்பதாகவே படுகிறது..

ஆயிரக்கணக்கில் வருகிற புத்தம்புது நோய்களும், ஆங்கில மருத்துவம் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறபொழுது அந்த நேரத்தில் கைகொடுக்கிற பண்டு பழமையான இந்திய மருத்துவ முறைகளும் ,அதை உறுதி செய்யும் வண்ணம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வேகமாக காலூன்றிவிட்ட யோகா மற்றும் ஆயுர்வேதமும் “இயற்கையை வெல்ல எந்த ஒரு சக்தியுமே உலகில் இதுவரை இல்லை; இனியும் இல்லை ” என்பதை திரும்ப,திரும்ப நினைவுறுத்துகிறது…

யார்தான் வெல்லக்கூடும் இயற்கையை ??

மூலிகைப் பூச்சி விரட்டி

மூலிகைப் பூச்சி விரட்டி

பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது, அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரினங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும்.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் – ஆடுதொடா, நொச்சிபோன்றவை.ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் – வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் – காட்டாமணக்கு, போன்றவை.கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் – வேப்பங்கொட்டை, எட்டிக் கொட்டைஇந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன. இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள், பூச்சிகள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.

மாதிரி அளவு:
அ) சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோஆ) 1. சீதா இலை- 3-5 கிலோ, 2. காகிதப்பூ இலை-3-5 கிலோ, 3. உண்ணிச் செடியிலை- 3-5 கிலோ, 4. பப்பாளி இலை 3-5 கிலோமேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். அதாவது 4 வகைத் தழைகள் ஒவ்வொன்றிலும் 2 கிலோ கணக்கில் 8 கிலோ அளவில் எடுத்துக் கொள்ளவேண்டு. இவற்றுடன் மேலே சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை 100-500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை
இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முத 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். வடிகட்டி கரைசலில் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊறல் போடவும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.

வேகல் முறை
இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 15 லிட்டர் நீரை ஊற்றி 2 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை வடித்து ஆறிய பின்னர் ஒரு படி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் மொத்த வடிகரைசலுடன் 100 லிட்டர் நீர் சேர்க்கலாம். கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.இலைப்புள்ளி நோய் பாதித்த இலைகளின் மேற்புறம் நீண்ட கண்வடிவ புள்ளிகள் தென்படும். பின்னர் ஒன்று சேர்ந்து பெரிதாகி இலைகள் மஞ்சள் நிறமடைந்து கருகிவிடும். இதற்கு சோற்றுக் கற்றாழை 3 கிலோ, உண்ணிச் செடி இலைகள் அல்லது சீதாப்பழ இலை அல்லது பப்பாளி இலை 3 கிலோ எடுத்து இவ்விரண்டு இலைகளையும் 15 லிட்டர் நீரில் வேகவிட வேண்டும். 10 விட்டர் அளவிற்கு சுண்டிய பிறகு 1 கிலோ மஞ்சள் தூள் கலந்து ஒருநாள் ஊறவிட வேண்டும். ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் கலந்து இலைப்புள்ளி தென்படும் இலைகளின் மேல் படும்படி தெளிக்க வேண்டும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

புதிய கோழி குஞ்சுகள் பராமரிப்பு

புதிய கோழி குஞ்சுகள் பராமரிப்பு

கோழி குஞ்சுகள் பராமரிப்பு :

Daytchick
புதிதாக வாங்கி வரப்படும் குஞ்சுகள் அனைத்தும் ஒரே மூலையில் ஒடுங்கினார் போல காணப்படுகிறதே அதை தவிர்க்க என்ன செய்யலாம்?
குஞ்சுகள் ஒன்றோடு ஓன்று ஒட்டினாற்போல் ஒன்றின் மீது ஓன்று எரிகொள்ளும் அதனால் அடியில் சிக்கிகொள்ளும் குஞ்சுகள் உயிர் இலக்க நேரிடும் அதை தவிர்க்க இதோ சில அனுபவமிக்க வழிமுறைகள்

1. எல்லா குஞ்சுகளையும் ஒரே இடத்தில் முத்தமாக விடக்கூடாது, 500 குஞ்சுகள் வாங்கினால் 500 குஞ்சுகளையும் ஒன்றாக விடக்கூடாது
2. அவற்றை 50 குஞ்சுகள் வீதம் 10 பகுதியாக பிரிக்க வேண்டும்
3. சுமார் 5 மீட்டர் நீளமுள்ள இரும்பு தகரத்தை( 5 மீட்டர் கு மேலும் இருக்கலாம், உயரம் 2 அடி ) வட்டமாக செய்து அந்த வட்டத்திற்குள் 50 குஞ்சுகளாக விடவும் அதன் குறுக்கு வாக்கில் 2 அல்லது 3 100 வாட்ஸ் pulb எரிய விடவும், தீவனத்தை ஒரே இடத்தில் போடாமல் அடியில் பிளாஸ்டிக் பை விரித்து அதன்மேல் காகித பேப்பர் விரித்து அதன்மேல் தீனவனத்தை பரவலாக இடவேண்டும், ஒரே இடத்தில் தீவனமிட்டால் குஞ்சுகளால் ஒன்றன்மேல் ஓன்று ஏறத்தான் செயும் அதனால் அடியில் சிக்கும் குஞ்சுகள் இறக்க வாய்ப்பு உள்ளது
4. இவ்வாறாக 500 குஞ்சு வாங்கினால் குறிப்பு எண் 3 இல் சொன்னது போல் 50 குஞ்சுகள் வீதன் 10 பகுதியாக பிரித்து 3 இல் சொன்னது போல் நடைமுறை படுத்துங்கள்
5. தரையில் பிளாஸ்டிக் பை விரித்து அதன்மேல் காகித பேப்பர் விரித்து அதன்மேல் தீனவனத்தை பரவலாக இடவேண்டும், குஞ்சுகள் எச்சமிடுவத்தால் காலை, மாலை இரண்டு நேரமும் காகித பேப்பரை மாற்ற வேண்டும்
6. வெட்பம் குறைவான நேரங்களில் , மாலை , இரவு, பனி நேரங்களில் பண்ணையை மூடி வைப்பது சிறந்தது
7. மின்சாரம் வசதி இல்லாதவர்கள் ஒரு பானை இல் தீ மூட்டி(மர கரி கட்டடைகளை நெருப்பாக்கி) அடியில் செங்கல் வைத்து அதன் மேல் பானையை குஞ்சுகளுக்கு நடுவில் வைத்து வெட்ப அளவுகோல் கொண்டும் தட்ப வெட்ப நிலையை சரிசெய்யலாம்
8. முதல் இரண்டு வாரத்திற்கு நீரை சுடவைத்து அதை முழுவதும் ஆற வைத்து கொடுக்கவும்
9. முதல் ஒரு வாரத்திற்கு குஞ்சுகளை அவ்வப்போது ஓட்டி விட வேண்டும் அப்போதுதான் அது ஓட பழகி அதனால் தீவனமும் அதிகம் சாப்பிடும்
10 முதல் இரண்டு வாரதிக்கு கொடுக்கப்படும் தீவனம் தவடுபோல் சிறுசிறு தூளாக இருக்க வேண்டும், பெரும் துகளாக இருந்தால் அவை குஞ்சீன் தொண்டையில் மாட்டி கொள்ள வைப்பு உள்ளது
11. குஞ்சுகள் ஓன்று இரண்டு இறந்து விட்டால் அவற்றை உடனே அப்புறபடுத்தி ஈ மற்றும் எறும்பு புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
12. பண்ணையின் தரையில் தேங்காய் துப்பி நார் ( தேங்காய் மஞ்சு) நன்றாக உலர வைத்து அதனை தரையில் பரப்பி அதமேல் குஞ்சுகளை விட வேண்டும் அதை ஒருநாள் விட்டு ஒருநாள் கிளைத்து விட்டால் எச்சங்கள் நாற்றம் அடிக்காது, குஞ்சுகளும் ஆரோக்கியமாக இருக்கும்

கோழி வளர்ப்பில் குவியும் வருமானம்

கோழி வளர்ப்பில் குவியும் வருமானம்


1003821_498111570279112_1079209822_n

ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.

பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.

பராமரிப்பு முறைகள்

பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.

48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?

அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

குஞ்சு பொரிப்பு

பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.
கட்டமைப்பு

ஆயிரம் கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின் ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம்.

முதலீடு
ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

வருமானம்

ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்பு
இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளும், வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் அடர்வினை மற்றும் 4 கிலோ பசுந்தீவனம் அளிக்க வேண்டும்.

நன்றி
மதுபாலன்
வேளாண்மை இயக்குநர்
தருமபுரி

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்

நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்


ஒரு மணி நேரத்தில், 
ஒரு மூட்டை. 
4 ஆயிரம் ரூபாய்தான் செலவு.

மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என ஒவ்வொன்றுக்கும் வேலையாட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவே முடியும். நிலக்கடலை விவசாயமும் விதிவிலக்கல்ல.

ஆனால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்ட சூழ்நிலையில், பயறு, உளுந்து போல… கடலை விவசாயத்தையும் மூட்டைக் கட்ட ஆரம்பித்து விட்டனர் விவசாயிகள் பலரும். அதையும் மீறி பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடலை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் பலரும்.
10458081_816498045037252_5975163855287643402_n 10625104_816497981703925_9019885439905458753_n
அத்தகையோரில் ஒருவரின் கஷ்டத்தைக் கேள்விப்பட்ட, புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றையே உருவாக்கிவிட்டார்.
“நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு, அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பாக்குற ஆசிரியர் ஒருத்தர், அவரோட தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பல்லாம் மூட்டைக் கணக்குல பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக் கொடுப்பார். ஆனா… ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரல. காரணம் கேட்டப்போ… ‘வேலைக்கு ஆள் கிடைக்கலை’னு சோகமா சொன்னார். அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. ‘இதுக்கு ஏதாவது ஒரு வகையில நாம தீர்வைக் கண்டுபிடிச்சாகணும்’னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம் போட்டேன்.

எங்க வீட்டுல விவசாயம் செய்த காலத்துல, கடலைக்கொடியில இருந்து கடலையைப் பிரிச்சு எடுக்குறதுக்காக ஒரு சின்னக் குழியை வெட்டி, அதுல கடலைக் கொடிகளைப் போட்டு, நடுவுல ஒரு குச்சியை வெச்சு அடிப்போம். கடலைக்காயெல்லாம் தனியா வந்துடும். ஒரே மூச்சுல ஒரு மூட்டை கடலையை இப்படி ஆய்ஞ்சி எடுத்தாலும், கை வலியே தெரியாது. சின்ன வயசுல இப்படி கடலையைப் பிரிச்செடுத்த விஷயம் அப்படியே எம் மனசுல இருக்க, அதை வெச்சே கடலைப் பிரிக்கறதுக்கான கருவியை மனசுக்குள்ள வடிவமைச்சேன்” என்று சொல்லும் அந்தோணியின் சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம். ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு, குடும்பத்துக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்திருக்கிறார். ஆசிரியர் பணி கிடைக்கவே, விவசாயத்துக்கு விடை கொடுத்திருக்கிறார். இருந்தாலும், அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக, அவை பற்றிய விவரங்களைச் சேகரிப்பதையும் செய்து வந்திருக்கிறார். அது, இந்த சந்தர்ப்பத்தில் கைகொடுக்க, கடலையைப் பிரிக்கும் கருவியை உருவாக்கிவிட்டார்.
அந்தக் கருவியின் வடிவமைப்பு பற்றி நம்மிடம் விவரித்த அந்தோணி, தொடர்கிறார்…

“முக்கால் அங்குல ‘எல் ஆங்கில்’ பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல நான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார் பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன் நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில் சட்டத்தை இணைத்து, மேல்புறம் திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும். கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொரு பேரிங் அமைத்து, அதன் நடுவே, ‘புல்லி’யுடன் கூடிய உருளையை தயார் செய்து கொள்ள வேண்டும். உருளையின் நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார் செய்யப்பட்ட இரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன் பெல்ட் மூலம் இணைக்க வேண்டும். 
கீழ்ப்பகுதியில் சரிவாக சல்லடைத் தகடைப் பொருத்தி, பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கருவி தயார்” என்றவர், தான் வடிவமைத்து, தன் வீட்டில் வைத்திருக்கும் கருவியை இயக்கியும் காட்டினார். மேற்புறமிருந்து கடலைக் கொடியை அவர் உள்ளே காட்டக் காட்ட, பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து ‘தட்தட்’ டென்று கடலைகள் தனித்தனியே பிரிந்து வந்து விழுந்தன, மின்னல் வேகத்தில்!
“கையில ஆயும்போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையை ஆயுறதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒரு மூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம் ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும்போதுதான் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரிய தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும் சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

விவசாயிகளுக்காக இவர் வடிவமைத்திருக்கும் இந்தக் கருவி பற்றிய செய்தி, வெளியில் பரவினால், உடனே தாங்களே கண்டுபிடித்தது போல பதிவு செய்துகொண்டு, பணம் பார்க்க ஆரம்பிக்கும் கூட்டம் இங்கே அதிகம். அதனால், இந்தக் கண்டுபிடிப்பை முதலில் உரிய முறையில் பதிவு செய்யவேண்டும் என்று அந்தோணியிடம் கூறிய நாம், ‘அடிமட்டக் கண்டுபிடிப்பாளர்கள் சங்கம்’ என்பதை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த ‘சேவா’ விவேகாநந்தன், கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். அவரும், ”நான் அந்தோணிக்கு உரிய உதவிகள் செய்து, அதைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறேன். இந்தக் கருவி, எல்லா விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்றால், இப்படி பதிவு செய்வதுதான் நல்லது. அதன் பிறகு, அரசு நிறுவனங்கள் மூலமாகக் கூட இதை வெளியில் கொண்டு வரலாம்” என்று ஆர்வத்தோடு சொன்னார்.

படங்கள் ச. தமிழ்க்குமரன்
தொடர்புக்கு அந்தோணி,
அலைபேசி 90035-30695

மண்பாண்ட மகிமை…!

மண்பாண்ட மகிமை…!




panai_pannaiyar

“மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம்


1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.
7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.
8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.
10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?


நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?

1. பெரும்பாலும் நமது கன்னி/சிப்பிப்பாறை/ராஜபாளையம் நாய்க்குட்டிகள் 35 முதல் 45 நாட்களுக்குள் தடுப்பூசி போடப்படமலயே தென் மாவட்டங்களில் இருந்து விற்கப்பட்டு , மற்ற மாவட்டங்களுக்கும் ,மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப் படுகிறன. தடுப்பூசி போடாத நாய்குட்டிகளை அதிக தூரம் எடுத்து செல்லும் பொழுது ,(stress )ன் நாய்குட்டிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, விடுவதால் டிஸ்டம்பர் மற்றும் பார்வோ வைரஸ் நோய்கள் எளிதாக தாக்கி விடும். பொதுவாக 45 வது நாள் (8 வது வாரம்தான்) தடுப்பூசி போடப்பட வேண்டிய நிலையிருந்தது,ஆனால் இப்பொழுது Nobivac Puppy DP எனும்– Nobivac Puppy DP தடுப்பூசி 4வது வாரம் (28வது நாள்) போடும்வகையில் தயாரிக்கபட்டு,கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே நாய்களை இனபெருக்கம்(breeding ) செய்யுது நாய்குட்டிக்களை விற்பனை செய்வதருக்கு முன் 4வது வாரம் (28வது நாள்) – Nobivac Puppy DP தடுப்பூசி போடுவதன் மூலம் டிஸ்டம்பர் மற்றும் பார்வோ எனும் குட்டிகளை,மழைக்காலங்களில் அதிகமாக தாக்கிக் கொல்லும் கொடிய நோயிகளை தடுக்கலாம். நான், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக Nobivac Puppy DP தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றேன், Nobivac Puppy DP போடப்பட்ட நாய்குட்டிகள் , டிஸ்டம்பர் மற்றும் பார்வோ வைரஸ் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.

பெரும்பாலும் மெடிக்கல் ஸ்டோர்களில் விற்கப்படும் Nobivac Puppy DP தடுப்பூசிகளின் தரம் குறைய வாய்ப்புகள் உள்ளன,ஏன் என்றால் இரவு செல்லும்போது,மின்சார செலவு கட்டணத்தை குறைப்பதருக்காக,கடையை மூடும் பொழுது ,தடுப்பூசியை சேமித்து வைத்திருக்கும்,குளிர்சாதனப்பெட்டியை நிறுத்திவிடுவதால்,இதனால் தடுப்பூசியின் தரம் குறைந்துவிடும் ,எனவே தகுதி பெற்ற கால்நடை மருத்துவரின் உதவியுடன் தடுப்பூசி தரம் அறிந்து போடுவதே சரியான அணுகுமுறையாகும்.

• நாய்க்குட்டி பிறந்த 4வது வாரம் (28வது நாள்) – Nobivac Puppy DP தடுப்பூசி
• நாய்க்குட்டி பிறந்த 8வது வாரம் (56வது நாள்) –Nobivac DHPPi
• நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம்(70 முதல் 90 நாட்களுக்குள்)= Nobivac DHPPi (Booster Dose)
• 12வது வாரம் (90வது நாள்) – Anti Rabies Vaccine (ARV)
• ஒவ்வொரு வருடமும் NOBIVAC DHPPi மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும்

1 .Nobivac Puppy DP (D for Distemper and P for parvo viral infection) – டிஸ்டம்பர் மற்றும் பார்வோ நோயைத் தடுக்கும்.
2. Nobivac DHPPi – இது கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper), பார்வோ வைரஸ் (Parvo Viral Enteritis), இன்பக்ஸுயஸ் கேனைன் கெப்படைட்டிஸ் (Infectious Canine Hepatitis), கேனைன் பாரா இன்புளுயன்சா (Canine Parainfluenza) மற்றும் கெனல் காஃப் (Kennel Cough) ஐந்து கொடிய நோய்களைத் தடுக்கின்றது.
3. Nobivac Lepto – எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோயைத் தடுக்கின்றது.
4. ARV (Anti Rabies Vaccine) – வெறிநாய்க்கடியால் வெறிநோயை (Rabies) தடுக்கின்றது.

உலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?


உலகம் அறியா ரகசியங்கள் - 
நாட்டு மாடு:: நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்?

நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும். தானாக பால் சொரிந்து. இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்.
இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம்-தொண்மை இதனால் அழிகிறது.

அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.
நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது).
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது.
கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது.
இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது.
பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது.

இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது.
ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது.

இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது.
தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும் (Read Google Scholars).
இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்?
மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது.

இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல.
இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.

இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள்.
சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.
முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான்.

நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம்.
திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம்.

இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.

நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லைஎனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள்.

நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.
மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன. இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, கார்பார்கர், சாகிவால்ன்னு பல வகைகள் இருக்கு.

ஆனா, ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான் சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறாங்க.

நாட்டு மாடுங்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும்,
பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவிச்சிக்கிட்டு வருது.

ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால, அதோட வெப்பம் பால், சிறுநீர் மூலமாத்தான் வெளியேறுது.

மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. அதுமட்டுமில்லாம அயல்நாட்டு இன மாடுகளோட சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கிறதில்ல.

இதுவே நம்ம நாட்டு மாடுகள்ல வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது மட்டுமில்லாம, சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமா கொடுக்கிற ஒரே காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியா முழுவதும் விவசாயிங்க வளர்த்துட்டு வர்றாங்க.

தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிஞ்சு போயிடுச்சி. கடந்த 30 வருசமா காங்கேய மாடுகளிலிருந்து பால் கறந்து விற்றுவரும் எனக்கு, பாரம்பரியமிக்க நாட்டு இனம் அழிஞ்சிட்டு வர்றதைப் பார்த்து ரொம்பக் கஷ்டமா இருந்துச்சி.

இதனாலேயே பல நன்மைகள் கொண்ட நாட்டு மாடுகளில் அதிகப் பால் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நம் இனங்களைக் காக்கலாம் என்ற எண்ணம் மனசுக்குள்ள வந்துடுச்சி.

அதனாலேயே தமிழகத்துல எந்த இடத்துல மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும் தவறாமப் போய் கலந்துக்கிட்டு நல்ல காங்கேயமா பார்த்து வாங்கிட்டு வந்துடுவேன்" என்று கூறும் நடராஜன்,

மாட்டு வர்க்கத்தில் நல்ல வம்சங்களைக் கண்டுபிடித்து பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவில் பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன் இனப்பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம் அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்" என்கிறார்.

முஸ்லிம் அரசர்கள்: முகலாய சாம்ராஜ்யத்தில்- பாபர் முதல் அகமத் ஷா வரை பசுவதை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது.

இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவதில் பெயர் போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசுவதையை ஆதரிக்க கூடாது என்று கடுமையாக வலியுருத்தி இருந்தார்.

மைசூர் சுல்தான்களான ஹைதரும், திப்புவும் கூட பசுக்கள் கொல்வதை தடை செய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்!

ராபர்ட் கிளைவ்: இந்தியாவின் விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.
காந்தி: பசுவதையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தினார்.

நேரு: சுதந்திர இந்தியாவில் முதல் நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என்று சொன்ன நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்த சொன்னால் பதவி விலகுவேன் என்று மிரட்டி பசுவதையை ஆதரித்தார்.

இந்திரா: பசுவதைக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடு மூலம் கொன்று அடக்குமுறையை கையாண்டார்.

நம்மாழ்வார்: பசுக்கள் நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வருகிறார். விலைமதிப்பில்லா பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை தரும், மரபு பசுக்கள் நமது சொத்து, அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுருத்தி வருகிறார்.

இன்று: பணத்துக்காக இன்று மரபின பசுக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. பசுவதை என்பது வெளிநாட்டு சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீக சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள்.

மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்!

நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..

பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன.
http://www.youtube.com/watch?v=9KMtQfjcJMo

இந்திய மாடுகளின் பெரிய கொலைக்களமான கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான்கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.
http://www.youtube.com/watch?v=KN83hnfqSvI

பாகிஸ்தானில் கூட மரபுபசுவினன்களை காக்க தனி நிர்வாகமே உள்ளது.
http://www.rccsc.com.pk/

நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்? திரு காசி பிச்சை அவர்களின் பேச்சு.
https://www.youtube.com/watch?v=48bPl4dgfks

இவை மட்டும் இல்லாது அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பாரத்தின் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது!
நாட்டு மாடுகளை சுற்றியிருக்கும் பன்னாட்டு அரசியல்
இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு.

அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.

விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிகொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது என்பதால் நாட்டு மாடுகளின் கொலைகளம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது.

இருந்தும் பசுவை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்து மக்களிடம் நோயை விதைக்கும் உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளை திணித்தார்கள்.

பால் அதிகம் கிடைத்ததால் பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்க துவங்கினர்.

நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில் போய் விட்டன.
இதனால் இலவச இயற்கை உரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கலப்பின பசுவின் பாலால் அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்ட சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது.

கலப்பின பசுக்களுக்கு தீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினர் வியாபாரம் விரிந்தது.

தீவனதுக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடபட்டதால் உணவு பொருட்கள் விலையும் எகிறியது.

பின்னால் வந்த இந்திய அரசாங்கமும் பல்வேறு காரணங்களால் பசுமை புரட்சி என்ற விஷ புரட்சி மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வேர்மிகம்போஸ்ட், தொளுவுரம், கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள்.

இனி வெளிநாட்டு நிறுவனங்கள் விற்க போகும் கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், கான்சர் போன்ற கொடிய நோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து.

பால் அல்ல மாடே கலப்படம்தான்!

குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும்.
அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது.

முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால். சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது.

இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது.
இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர்.
மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது.
மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர்.
பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது.

அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது.
வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது.

பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர்.

சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு. நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’ முறையில் குழந்தை பிறக்கிறது.

தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல். தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது.
ஆண்களுக்கு பெண்பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது.

ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது.

பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் (திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்…

அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.
”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.
ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார்.

அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது,
நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார்.

தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.
கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது.
அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன.

விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன.
புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.

கோழிக் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரிக்க முடியுமா?”

”கோழிக் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரிக்க முடியுமா?” என்று கிருஷ்ணகுமார் கேட்டிருக்கிறார்.

148739_684103394997941_6130741106384966321_n
இவருக்கு பதில் சொல்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் செல்வம்.

‘‘அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கோழிப் பண்ணைகளில் கழிவுகளை பயன்படுத்தி பயோ-கேஸ் தயாரித்து வருகிறார்கள். அதிலிருந்து மின்சாரம் தயாரித்து விளக்கு எரிக்கிறார்கள். மோட்டர் பம்பு செட்டை ஓட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கோழிக் கழிவுகளை பயன் படுத்தி பயோ-கேஸ் தயாரிக்கும் முறை பிரபல மாகவில்லை. மாட்டுச் சாணத்தை வைத்துத் தயாரிப்பதைக் காட்டிலும் கோழிக் கழிவிலிருந்து அதிகளவு பயோ-கேஸ் உற்பத்தி செய்யமுடியும். இதில் அதிகளவு நைட்ரஜன் சத்து இருப்பதால் அதிகமாக மீத்தேன் வாயுவை வெளியிடும். இதன்மூலம் அதிகமான சக்தியைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் கோழிக்கழிவுகளிலிருந்து பயோ -கேஸ் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.” தொடர்புக்கு: அலைபேசி: 99401-78909

ஆட்டு வைத்தியமுறைகள்

ஆட்டு வைத்தியமுறைகள்


அட்டுக் கழிச்சலுக்கு :
நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .

சந்தடைப்பானுக்கு :
குப்பைமேனி வேர் ,பூண்டு ,வெற்றிலை ,சூடம் அரைத்து கொடுக்க குணமாகும். சூடம் மிக குறைவாக சேர்க்க வேண்டும் )

பூச்சி கடிக்கு :
கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .

ஆடு வாதத்திற்க்கு:
சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .

ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்.

வைத்திய முறைகள் (பசு & ஆடு)

பசு வைத்திய முறைகள்

பசு வைத்திய முறைகள் :
இளங்கொடி விழாத பசுவிற்கு வெண்டைக்காய் இலையை ஒரு கை பிடி அளவு எடுத்துஇத்துடன் சிறிது உப்பு சேர்த்து செக்கில் ஆட்டி பசுவுக்கு புகட்ட வேண்டும்


ஆட்டு வைத்தியமுறைகள்

ஆட்டு வைத்தியமுறைகள் : இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .
ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம்

சென்னை: காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

காய்ச்சலுக்கு ஊசி போடாதீங்க: எச்சரிக்கும் தமிழக சுகாதாரத் துறை இது குறித்து தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.

டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம். பாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால் ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும்.

காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில் குறையும். மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடாமல் இருக்க வேண்டும் என்றார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/don-t-take-injection-fever-warns-tn-health-department-214308.html

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதிகா சந்திரபாகம்.

நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.
தேத்தான் கொட்டை:

நீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை. தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்.

முருங்கை விதை:

தேத்தான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

துளசி:

துளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.
செப்புப் பாத்திரம்:

உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் அடியோடு நீக்கிவிடும்.

வாழைப்பழத் தோல்:

வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.

-க.பிரபாகரன்

வீட்டுக்குறிப்புக்கள் :-

வீட்டுக்குறிப்புக்கள் :-

1. வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.

2. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.

3. டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.

4. முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.

5. பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.

6. தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.

7. துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.

8. பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் பல நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

9. உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.

10. வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.



ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-


காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன.
இதில் அதிக அளவு புரதமும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ் தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம்.

இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம்.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம்.

நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன.

தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது.

உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது.

உடலில் உடல் பலவீனம் மறைந்தது.

இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள் பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள்.

அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
 
Photo: முதுமையை ஓட ஓட
விரட்டும் ஓட்ஸ்!

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன.
இதில் அதிக அளவு புரதமும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ் தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம்.

இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம்.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம்.

நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன.

தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது.

உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது.

உடலில் உடல் பலவீனம் மறைந்தது.

இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள் பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள்.

அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

மஞ்சள் பால்


மஞ்சள் பால்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது

.*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

சித்த மருத்துவக் குறிப்புகள்

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம்.

தந்த ரோகம் - பல்பொடி

தந்த ரோகம் - பல்பொடி

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.

இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
— with Maleappane Danasegarane and 23 others.
Photo: விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:- பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:- ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:- வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:- பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.