February 14, 2017

நாட்டுக் கோழிகள் தாய்மை உணர்வு அதிகம் கொண்டவை.

நாட்டுக் கோழிகள் தாய்மை உணர்வு அதிகம் கொண்டவை.
எனவே தொடர்ந்து 15--20 முட்டைகளிட்டு அவற்றைஅடைகாத்து
குஞ்சு பொரிக்கும் குணம் கொண்டவை.

தாய்மார்கள் குழந்தைகளை பராமரிப்பது போலவே நாட்டுக்கோழிகளும் குஞ்சுகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வளர்க்கும். குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காக பருந்து, கழுகு, காக்கை போன்றஎதிரிகளிடமிருந்து காப்பதற்கு அவைகளைப் பறந்து துரத்தி அடிக்கும் குணம் கொண்டவை. நாட்டுக்கோழி வளர்ப்பினால் கீழ்வரும் நன்மைகள் ஏற்படுகின்றன.

1. கிராம மக்களின் நிலையான வருமானம்
2. உறவினர்களுடன் உண்டு மகிழ
3. வேண்டுதலுக்காகப் பலியிட
4. அவசரத் தேவைக்கு செலவு செய்ய
5. விலங்கினப் புரதத்தை பூர்த்தி செய்ய
6. மிகக் குறைந்த இடவசதி போதுமானது
7. குறைந்த முதலீடு போதுமானது.
8. எளிமையான பராமரிப்பு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் குறைந்த சுகாதாரப் பணியாளர்.
9. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
10. அக ஒட்டுண்ணிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

பெரும்பாலான கிராமங்களில் வீட்டிற்கு குறைந்தது 10 முதல் 20 கோழிகள் வரை வளர்க்கின்றனர். பெண்கள் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சிறுவாட்டுக்காசு என்றும் சிறுசேமிப்பாகச் சேர்த்து தேவையான பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை எளிய மக்கள் ஹைப்போ புரோட்டினிமியா என்னும் புரதச்சத்து மிகவும் குறைந்த உணவையே உட்கொள்கின்றனர்.

இதனால் சரியான உடல் வளர்ச்சி இல்லாமலும், மூளை வளர்ச்சி இல்லாமலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தும் காணப்படுகின்றனர். எனவே கிராம மக்களுக்கு நாட்டுக் கோழிகள் மூலம் ஓரளவு புரதச் சத்து கிடைத்து விடுகிறது. இது நாட்டுக் கோழியின் சிறப்பு அம்சமாகும்.

1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது நாம் உட்கொண்ட முட்டையின் அளவு 7முதல் 10முட்டைதான் இந்தியாவில் இன்று ஒரு நாளைக்கு 15 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து விட்டோம் அப்படி இருந்தும் நாம் உட்கொள்ளும் முட்டையின் எண்ணிக்கை 35-40 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் நாம் உட்கொள்ள வேண்டிய முட்டை ஒரு நாளைக்கு அரை முட்டை வீதம் வருடத்திற்கு 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்.

தற்போது உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் 35-40 சதவீதம் நாட்டுக்கோழிகளில் இருந்து தான் கிடைக்கிறது என்பதே உண்மையாகும். நாட்டுக் கோழிகளை வளர்பதற்கு மிகக் குறைந்த இடவசதியே போதுமானது முட்டைக்கோழிகளை வளர்ப்பதைப்போல் அதிக செலவு செய்து கொட்டகைகள் அமைக்க வேண்டிய அவசியமில்லை.

பண்ணைகளில் வளர்க்கப்படும் வீரியக்கோழிகளுக்கு லட்சக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். ஆனால் ஐந்து நாட்டுக்கோழிகள் வாங்கி அதிலிருந்தே இனப்பெருக்கம் செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும் ஒரு கோழியிலிருந்து வருடத்திற்கு ரூ5000 வருமானம் கிடைக்கும். 10 கோழிகளை வளர்த்தாலே வருடத்திற்கு 50,000ரூபாய் வருமானம் கிடைக்கும். கோழிப் பண்ணைகளில் உள்ள வீரிய இனக்கோழிகளைப் பராமரிக்க வேலை ஆட்களை அமர்த்த வேண்டியது அவசியம் நாட்டுக் கோழிகளை வளர்க்க வேலை ஆட்கள் தேவையில்லை.

வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளுமே போதுமானது எனவே செலவும் குறைவாகிறது. நாட்டுக் கோழிகள் வீட்டிற்கு வெளியில் உள்ள புழு, பூச்சிகளைக் சாப்பிடுவதாலும், புல் பூண்டுகளை உண்பதாலும் சுற்றுபுறம் தூய்மையாக இருப்பதுடன் சுகாதாரமாகவும் இருக்கிறது. இதனால் நாட்டுக்கோழிகள் தனக்குத் தேவையான புரதச் சத்தையும் நார்ச்சத்தையும் தானே தேடிக்கொண்டு உண்பதால் நமக்கு தீவனச் செலவு குறைவதுடன் நாட்டுக்கோழி இறைச்சி மிருதுவாகவும் ருசியாகவும் உள்ளது. வீரிய இனக் கோழியின் இறைச்சி அவ்வளவாக ருசியாக இருக்காது.

வீரிய இனக் கோழிகளுக்கு 64 நோய்கள் தாக்குகின்றன. ஆனால் நாட்டுக் கோழிகளுக்கு 4--5 நோய்களே ஏற்படுகின்றன. முட்டைக் கோழிகளுக்கு 13 தடுப்பூசிகளும், இறைச்சிக் கோழிகளுக்கு 5 தடுப்பூசிகளும் அவசியம் போட வேண்டும் ஆனால் நாட்டுகோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.எனவே 10-20 கோழிகள் வளர்ப்பவர்கள் வெள்ளைக்கழிச்சல் நோய் என்னும் இரானிக்கெட் நோய்க்கு மட்டும் தடுப்பூசி போட்டால் போதுமானது. அதிக அளவில் நாட்டுக்கோழிகளை வளர்க்கும் போது 4-5 தடுப்பூசிகள் கட்டாயம் போட வேண்டியது அவசியம். ஒரு சில சமயங்களில் மட்டுமே காக்சீடியோசிஸ் என்னும் இரத்தக்கழிச்சல் நோயால் நாட்டுக் கோழிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் வீரிய இனக்கோழிகள் தொட்டாச்சிணுங்கியைப் போல் அதன் பராமரிப்பில் சிறு தவறு நேர்ந்தாலும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டுவிடும்.

நாட்டுகோழிகளுக்கு மேரக்ஸ் வியாதியும் கம்போரா வியாதியும், கொரைசா என்னும் சிறுமூச்சுக்குழல் வியாதியும் ஏற்படுவதில்லை. ஆனால் வீரிய இனக்கோழிகள் இவைகளால் பாதிக்கப்பட்டு முட்டை உற்பத்தி குறைவதுடன் உயிரிழப்பு ஏற்படும். வீரிய இனக்கோழிகள் கோடை காலத்தில் வெப்பத்தைத் தாங்காமல் ஹீட் ஸ்டிரோக் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு அதிக கோழிகள் இறந்துவிடும். ஆனால் நாட்டுகோழிகளுக்கு குறைந்த அளவு இறகுகளும் மெல்லிய கொழுபற்ற தோலும் உள்ளதால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறது.
நாட்டுக் கோழிகள் நெரிசலைத் தாங்கும் குணம் கொண்டவை. ஆனால் உயிரினக் கோழிகள் நெரிசலைத் தாங்காது இறந்துவிடும். உயிரினக் கோழிகள் பண்ணைகளில் ஒரே கூட்டமாக ஒரு மூலைக்குச் சென்றால் அதில் பெரும்பாலான கோழிகள் இறந்துவிடும். நாட்டுக் கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது ஒரே கோணிப்பையில் 80-100 கோழிகளைப் போட்டு அனுப்பினாலும் இறக்காது. ஆனால் உயிரினக்கோழிகள் அதிகம் இறந்து விடும். நாட்டுக் கோழி முட்டையின் மஞ்சள் கரு நல்ல அடர்ந்த மஞ்சள் நிறத்துடன் கெட்டியாக இருக்கும்.

கோழிகள் புல் பூண்டுகள் சாப்பிட்டு வைட்டமீன் எ சத்து அதிகம் உள்ளதால் மஞ்சள் கரு அடர்த்தியாக உள்ளது. ஆனால் உயிரினக் கோழி முட்டையில் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதோடு, நாட்டுக் கோழி கருவைப் போல கெட்டியாக இல்லாமல் நீர்த்தும் இருக்கும். நாட்டுக் கோழிகள் 15-20 முட்டைகள் இட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும் ஆனால் உயிரினக் கோழிகளுக்கு அடைகாக்கும் குணம் கிடையாது. நாட்டுக்கோழிகள் வெளியில் மேய்ச்சலுக்குச் சென்று தீவனத்தை உண்ணும் குணம் கொண்டது. ஆனால் உயிரினக் கோழிகள் வெளியில் சென்று மேயாது. நாட்டுக்கோழிகளை உயிரினக் கோழிகள் வளர்ப்பது போன்று கலப்புத்தீவனம் கொடுத்து வளர்த்தால் அவை சரியாக வளர்வதில்லை.

நாட்டுக் கோழி இறைச்சியின் மருத்துவ குணங்கள் :
கடக்நாத் என்னும் கருங்கோழிகள் மத்தியப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டது. இக்கோழியின் இறைச்சி கருப்பாக இருப்பதால் இதற்கு பிளாக் மீட் சிக்கன் அல்லது காலாமாசி என்று அழைக்கின்றனர். இதன் இறைச்சி ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் மருத்துவ குணமும் கொண்டது. இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். ஆண்மை குணம் குறைந்த ஆண்கள் கடக்நாத் இறைச்சியை சாப்பிட்டால் வயாக்ரா மருந்தைப் போல ஆண்மையை அடைவார்கள். ஹோமியோபதி மருத்துவத்தில் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கடக்நாத் கோழி இறைச்சி பயன்படுத்தப்படுகிறது.
கடக்நாத் கோழி இறைச்சியில் கொலஸ்டரால் சத்து மிகவும் குறைவு என்பதால் இருதய நோய் உள்ளவர்களுக்கும் இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் ஏற்ற இறைச்சியாகும். மேலும் அதிகமான அமினோ அமிலங்களும் மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் அதிகம் உள்ளது.

“நாட்டுக் கோழி வளர்ப்போம் வீட்டு வருமானம் பெருக்குவோம்”

No comments:

Post a Comment